Friday, December 5, 2014

எதிலப்பா நாயக்கர், தளி பாளையக்காரர்: ஆங்கிலேயத் தூதனைத் தூக்கிலிட்ட கல்வெட்டு

The tomb of the Englishman on which the early epitaph dating back to 1801 was discovered, in Coimbatore | Express
தளி பாளையப்பட்டில் உள்ள ஆங்கிலேயாதூதனின் சமாதி, தமிழ்க் கல்வெட்டு
பொதுவாக ஆங்கிலேயர்கள் நம்முடைய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பிடித்து தூக்கில் போடுவது வழக்கம். ஆனால் இந்திய அரசர்களின் யாரேனும் ஒருவர், ஒரு ஆங்கிலேயாரையாவது தூக்கில் போட்டிருக்கிறார்களா? ஆமாம் கொங்கு நாட்டில் உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள ஒரு பாளையப்பட்டு கிராமத்தில் இந்த சம்பவம் 1801 ஆம் ஆண்டு நிகழ்ந்திருக்கிறது.
 
டாக்டர் எஸ்.ரவி பிரபலமான தொல்லியல் அறிஞர், சிறந்த கல்வெட்டாய்வாளர். இவர் உடுமலைப்பேட்டையிலிருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தளி பாளையப்பட்டு கிராமத்தில் இருந்த ஒரு தமிழ்க் கல்வெட்டைத் தேடிக் கண்டுபிடித்துள்ளார்.  இப்பகுதியில் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக இப்பகுதியின் பாளையக்காரகளால் நிகழ்ந்த கிளர்ச்சி பற்றிப் பேசுகிறது. ஒரு ஆங்கிலேயத் தூதன் எதிலப்பா  நாயக்கர் எனும் தளி பாளையக்காரரால் தூக்கிலிடப்பட்டது பற்றிய சரித்திரம் இக்கல்வெட்டு மூலம் வெளிச்சத்துக்கு வருகிறது.  இது பற்றி இப்பதிவில் விரிவாகக் காண்போம்

மதுரையில் 16 நூற்றாண்டில் இருந்து நாயக்கர் ஆட்சி மலர்ந்தது. பெரும்பான்மையான பாளையங்களில் தெலுங்கு மொழியை பேச கூடிய ராஜகம்பளம் அல்லது தொட்டிய நாயக்கர்கள் என்று சொல்லப்படும் கம்பளத்து சமுதாய மக்களே ஆண்டு உள்ளனர். இவர்கள் வடுகர் என்றும் தமிழ் நாட்டில் அழைக்கப்படுகிறார்கள். இவர்களது பூர்விகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். இப்பகுதி கம்பளம் என்றும் கம்பள நாடு என்றும் அறியப்படுகிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்டு வந்த பாளையக்காரர். தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டவர்.

எதிலப்பா நாயக்கர் தளி பாளையப்பட்டை ஆண்டு வந்த பாளையக்காரர். இவரும் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தில் பிறந்தவர். கட்டபொம்மனின் வம்சாவளியைச் சேர்ந்தவர். 

உடுமலைப்பேட்டையிலிருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தளி பழையப்பட்டு என்பது வீரபாண்டிய கட்டபொம்மனால் நிறுவப்பட்ட சண்டை பயிற்சி அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இராணுவ முகாம். இது பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.
எதிலப்பா நாயக்கர், 1797 – 1798 இல் நடந்த முதல் பாஞ்சாலங்குறிச்சிப் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனுடன் இணைந்து  ஆலன்துரையின் ஆங்கிலேயப்படைக்கு எதிராகப் போராடியவர். பானர்மென் எனும் ஆங்கிலேயத் தளபதி செப்டம்பர் 5, 1799 இல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டார். கடும் போர் நடைபெற்று பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். என்றாலும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலை ஏற்பட்டபோது வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறவே செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை அரசர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.

1799 இல் வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட பிறகு பல பாளையக்காரர்கள் ஏதிலப்பா நாயக்கரின் தலைமையில் ஒன்றிணைந்தனர். இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சிப் போர் 1801 இல் நிகழ்வதற்கு இவர் தலைமையில் அமைந்த கூட்டணி காரணமாக அமைந்தது. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801 இல் பாஞ்சாலங்குறிச்சி படை வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை புத்துயிர் பெற்றது. ஊமைத்துரையைக் கைது செய்வதற்கு வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் நுழைய முடியாமல் திரும்பிச் சென்றார். பின்னர் இவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801 இல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டு 24.05.1801 இல் கோட்டையைக் கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர்.

ஆங்கிலேய அதிகாரிகள் இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சிப் போருக்கு உதவிய பாளையக்காரர்களின் பட்டியலைத் தயார் செய்தனர். எதிலப்பா நாயக்கர் தான் இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சிப் போருக்கு மூல காரணம் என்று தெரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள், தூதர்களை நாயக்கரின் கோட்டைக்கு அனுப்பினர். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது பற்றி அறிந்து கொதித்துப் போயிருந்த நாயக்கர், ஆன்ட்ரே கட்டி என்ற அந்த ஆங்கிலேய தலைமைத் தூதனைப் பிடித்து சாகும்வரை தூக்கில் தொங்கவிட்டாராம். சடலத்தை அங்கிருந்த தோட்டாத்தில் புதைத்து விட்டாராம்.  இந்தச் சம்பவம் நடந்தது  வியாழக்கிழமை, ஏப்ரல் 23, 1801 ஆம் ஆண்டு. இந்த ஆங்கிலேய தூதனின் சமாதியில் உள்ள தமிழ்க் கல்வெட்டு, தூதன் பெயர் ஆன்ட்ரே கட்டி என்றும் மரணித்த தேதி வியாழக்கிழமை, ஏப்ரல் 23, 1801 ஆம் ஆண்டு என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை நகரத்திலிருந்த
ஆங்கிறாய் கேத்தி பரங்கி
இருபத்தேழு வயதில்
தெய்வீகமாகி அடங்கின சமாது

 (Angirai Kethi, a twentyseven year old Englishman from Tanjore "attained divinity and buried here")

தேவராய நாயக்கர் என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டம் இது. தூதனை தூக்கில் தொங்குவித்த மரம்கூட இந்தத் தோட்டத்தில் இருக்கிறதாம். இந்த சமாதி உள்ள தோட்டம் 'தூக்குமரத்தோட்டம்' என்று இந்த கிராமத்தவர்களால் அழைக்கப்படுகிறது. காலகாலமாய் கம்பளத்து நாயக்க மக்களிடம் பேச்சு வழக்கில் புளங்கி வந்த இக்கதை அரங்கசாமி கவுண்டரால் தொகுக்கப்பட்டு 'எதிலப்பன் வரலாறு' என்று நூல் வடிவம் பெற்றுள்ளது.

மேற்கோள்
  1. 19th century epitaph reveals new history. The New Indian Express.  05th August 2013
  2. The Kongu Chieftain who hanged a British Messenger. The New Sunday Express. 19 October 2014
  3. வீரபாண்டியகட்டபொம்மனின் 255 வது பிறந்த நாள். தமிழ் மீடியா, டிசம்பர் 05, 2014

Wednesday, December 3, 2014

கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது: கிளுகிளுப்பான தமிழ் தூது இலக்கியம்



கூளப்பநாயக்கன் காதல் மற்றும் கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது என்ற இரண்டு நூற்கள் பதினேழாம் நூற்றாண்டில் தோன்றிய தூது இலக்கியங்களாகும்இந்த இரண்டு நூற்களையும் இயற்றியவர் சுப்ரதீபக் கவிராயர்.

16 ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 17 ஆம்   நூற்றாண்டின் தொடக்க காலங்களில் தமிழகத்தில் நாயக்கர்கள் ஆட்சி மலர்ந்தது. நாயக்க மன்னர்கள் தஞ்சை, மதுரை போன்ற பகுதிகளை விஜயநகர அரசின் பிரதிநிதிகளாக ஆளத் தொடங்கினார்கள். இவர்கள் தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் சரியாக ஆதரிக்கவில்லை.

நாயக்க மன்னர்கள் தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் போதிய ஆதரவு அளிக்காவிட்டாலும் பொதுமக்கள், ஜமீன்தார்கள் மற்றும் செல்வந்தர்களின் ஆதரவு போதிய அளவில் தமிழ் சிற்றிலக்கியங்களுக்கு  இருந்தது எனலாம். இப்படி சில ஜமீன்தார்கள் மற்றும் செல்வர்களின் ஆதரவில் 17 ஆம் நூற்றாண்டில் காதல், மடல், தூது, நொண்டிநாடகம் போன்ற காமச்சுவை ததும்பும் சிற்றிலக்கியங்கள் இயற்றப்பட்டன. நிலக்கோட்டை (இன்று ஜமீன் என்று அறியப்படுகிறது) நாயக்க சிற்றரசரான கூளப்ப நாயக்கர்  விரலிவிடு தூது போன்ற சிற்றிலக்கியத்துக்கு ஆதரவு தந்துள்ளார்.
 
உயர்திணை மாந்தர்களான புலவர், பாணர், கூத்தர், அறிவர், பார்ப்பான், பாங்கன், விருந்தினர்,  இளையர், பாடினி, விறலியர், தோழி, தாய் மற்றும்
எகினம், மயில், கிளி, மழை, பூவை, சகி, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு முதலிய அஃறிணைப் பொருட்களைத் தூது செல்லும்படி ஏவிவிடுவது போன்று அமைக்கும் இலக்கியம் தூது இலக்கியம் என்று வகைப்படுத்தப்படுகிறது. தலைவி தலைவனிடத்தேயும், தலைவன் தலைவியிடத்தேயும் அனுப்புகின்ற தூது அகத்தூது என்றும்; அரசன் பகைவரிடத்தேயும், புலவர் வள்ளலிடத்தேயும் அனுப்புகின்ற தூது புறத்தூது என்றும் வகைப்படுத்துகிறார்கள். தூது நூல்கள் கலிவெண்பா என்ற யாப்பில் இயற்றப்பட வேண்டும் எனப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன.

இவ்வாறு அனுப்பும் பல அகத்தூதுகள் காதலால் கட்டுண்டு பின் பிரிவுத் துயரால் துன்புறும் தலைவன் மற்றும் தலைவியரிடையே நிகழ்ந்தன. ஒருவர்
தனது பிரிவுத்துயரை மற்றவருக்கு அறிவிக்க புலவர், பாணர், கூத்தர், அறிவர், பார்ப்பான், பாங்கன், விருந்தினர்,  இளையர், பாடினி, விறலியர், தோழி, பூவை, தாய் போன்ற மனிதர்களையும், எகினம், மயில், கிளி,   குயில், வண்டு அன்னம், மான், பூநெல் போன்ற பிற உயிரினங்களையும், மழை, மேகம், தென்றல் போன்ற அஃறிணைப் பொருட்களையும் தூதாக அனுப்பினார்கள். முதன்முதலில் கி.பி. 14ஆம் நூற்றாண்டில் நெஞ்சுவிடு தூது என்ற தமிழ் தூது இலக்கியம் தோன்றியது. தொடர்ந்து அன்னம் விடு தூது, காக்கை விடு தூது, கிள்ளை விடு தூது, மான் விடு தூது, மேகம் விடு தூது போன்று பல தூது இலக்கியங்கள் தோன்றின.

சில சங்க இலக்கியப் பாடல்களில் தலைவன் தலைவியரிடையே தூது அனுப்பும் செய்தி காணப்படுகிறது. பிற்காலத்தில் தோன்றிய சைவ வைணவ பக்தி இலக்கியங்கள் கடவுளர்களைத் தலைவனாகப் பாவித்து தூது அனுப்பும் செய்தி வருகிறது. தூது என்ற சிற்றிலக்கிய வகை தூது பற்றிய அடிப்படையில் அமைந்தது. பிரபந்தங்கள் என்னும் சிற்றிலக்கிய வகை வடமொழியில் உள்ளது. வடமொழியில் தூது இலக்கியம் சந்தேசம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதுமகாகவி காளிதாசன் இயற்றிய மேக சந்தேசம் (மேகத்தைத் தூது விடுவது) பிரபல தூது இலக்கியமாகும்.

கூளப்பநாயக்கன் காதல் மற்றும் கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது 

கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது  1728 இல் நிலக்கோட்டையை ஆண்ட 1728-ல் நிலக்கோட்டையை ஆண்ட கூளப்பநாயக்கன் என்னும் நாயக்க சிற்றரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுந்ததுஇத்தலைப்பில் கவிஞர் கண்ணதாசனின் கிளுகிளுப்பான உரையுடன் இணைந்த கூளப்ப நாயக்கன் காதல் என்னும் நூல் வெளிவந்துள்ளது.

விறலிவிடு தூதில் பொதுவாகக் காணப்படும் கதை இதுதான்: உயர்குடிப் பிறந்த ஆண்மக்கள் காமம் துய்க்க தாசியை நாடுவதும், இதன் மூலம் பொருள் இழத்தலும் நாளடைவில் தாசியால் அவமதிக்கப்பட்டு அவளைவிட்டு வெளியேறுதலும் இறுதியில் விறலியைத் தூதுவிட்டு, குடும்பத்துடன் இணைந்து மனைவி மக்களுடன் இன்பமாக வாழ்தலும் ஆகும். எனவே விறலி விடு தூது இலக்கியங்கள் எல்லாம் கிளுகிளுப்பான சிற்றின்ப வருணனையுடன் கூடிய பாடல்களுடன் கதை சொல்லப்படுகிறது. இறுதியில் நல்லின்பம் பெற ஆண்மக்களுக்கு அறிவுறுத்துவது. என்றாலும்  புலவரின் நோக்கம் சிற்றின்பம் பற்றி விலாவரியாகச் சொல்வதுதான். 

விறலி விடு தூது இலக்கியங்களில் கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது விரகம், காமம், காதல், எல்லாம் சரிவிகிதத்தில் கலந்து இயற்றப்பட்டுள்ளது. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தாசிப் பெண்களின் ஆடையணிகளான  ரவிக்கை, பொற் சரிகை, கிண்ண முலைக் கச்சு, சந்திர காந்தக் கச்சு என்பது பற்றியெல்லாம் விலாவரியாக தெரியவருகிறது.

எனவே இதற்கு அந்தக்காலத்திலேயே பெரிய வாசகர் வட்டம் இருந்திருக்கிறது. சிற்றின்பப் பிரியர்களான சிற்றரசர்களும், பாளையக்காரர்களும் ஒன்றாகக் கூடி கேட்டுச் சுவைப்பார்களாம். காமம் பற்றிப் பேசினாலும் இவ்விலக்கியங்களில் வரலாறு, பண்பாடு, கலை மற்றும் அரசியல் பற்றிய அரிய செய்திகள் காணக்கிடைக்கின்றன. 

Thursday, November 27, 2014

அண்ணன்மார் சுவாமி கதை பகுதி 2: வீரப்பூர் பொன்னர் - சங்கர் கோவில் மாசித் திருவிழா

வீரப்பூர் பெரியக்காண்டியம்மன் கோவில்
பொன்னர் சங்கர் கோவில்

பொன்னர் சங்கர் கோவில்

பொன்னர் சங்கர் சன்னதி

நெல்லிவாளநாடு வரைபடம்


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பெரியக்காண்டியம்மன் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் தலம்தான் வீரப்பூர். இங்கு பெரியக்காண்டியம்மன் கோயிலுக்கு அருகில் அண்ணன்மார் சுவாமிகள் எனப்படும் பொன்னர்- சங்கர் கோவில் உள்ளது. அருகில் “நான் உங்களுடனேயே இருக்கிறேன்; பிறகு என்ன கவலை? உங்களுக்கு பயம் எதற்கு?” என்று கூறி அருள்பாலிக்கும் காவல் தெய்வமாய், பிரமாண்டமான உயரத்தில் அமைந்து மிரட்டும் விழிகளுடன் விளங்கும் மந்திரம் காத்த மகாமுனி சிலை, காளை மாட்டுடன் இணைந்து நிற்கும் சாம்புவன் சிலை ஆகியன உள்ளன. அருகே வீரமலை மீது பெரியக்காண்டியம்மன் தவம் செய்த இடமெனக் கூறப்படும் தவசு கம்பம் உள்ளது.

வீரமலையின் ஒரு பகுதியில் கூவனாம் பள்ளம், வீரப்போர் நடந்த இடமாகக் கருதப்படும் படுகளம் கோவில், அண்ணன்மார் சுவாமி கதையில் வெள்ளாங்குளம் என்று கூறப்படும் இனாம்குளத்தூர், வளநாடு அண்ணன்மார் கோட்டை கோவில், கன்னிமார் அம்மன் கோவில், கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள செல்லாண்டியம்மன் கோவில் என வீரப்பூரை, பொன்னர்- சங்கரை மையமாகக் கொண்ட கோவில்கள், முக்கிய இடங்கள் எனக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஏராளம் உள்ளன.

முன்பெல்லாம் (சுமார் 30 - 40 ஆண்டுகளுக்கு முன்) கட்டுச்சோறு கட்டி எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டு இரண்டு அல்லது மூன்று நாள் பயணமாக வீரப்பூர் செல்வார்களாம். தங்களின் ஊரில் இருந்து வீரப்பூரின் அடையாளமாக விளங்கும் ஏதேனும் ஒரு கோவிலில் இருந்து புறப்பட்டு வீரப்பூரை மையமாகக் கொண்ட அத்தனை கோவில்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்வது வழக்கமாக இருந்தது. அப்போது பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர்ப் பந்தல் (நீர்மோரும் கிடைக்கும்) அமைத்து தரும காரியம் செய்து வந்தனர்.

அங்குள்ள பெரிய கோவிலில் (வீரப்பூரில் பெரியக்காண்டியம்மன் கோவிலை அங்கு இவ்வாறு சொல்வார்கள்) குழந்தைகளுக்கு முடியிறக்கி, பொங்கல் வைத்து, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவதாக மாறிவிட்டது. புறப்பட்டு வரும் வழியில் கூடுதலாக படுகளம் கோவிலில் சுவாமி கும்பிட்டு விட்டு வருவதோடு முடிந்து விடுகிறது. ஆனால், மாசி மாதத் திருவிழாவின்போது வீட்டுக்கு ஒருவரேனும் சென்று நெய்விளக்குப் போட்டுவிட்டு வருவது வழக்கத்தில் உள்ளது.

அண்ணன்மார் சாமி கதை நடந்த இடமாக கருதப்படும் வீரப்பூரில் வருடம் தோறும் மாசி மாதம் நடைபெறும் திருவிழாவைக் காணக் கண்கோடி வேண்டும். பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவிற்கு வரும் பெரும்பான்மையான மக்கள் அந்த பத்து நாட்களும் இப்பகுதிகளிலேயே தங்கியிருந்து திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். இலட்சக்கணக்கில் கூடும் மக்கள் கூட்டத்தால் இப்பகுதியே திமிலோகப்படுகிறது.

வீரப்பூர் கோவிலில் மாசித் திருவிழா சிவராத்திரிக்கு அடுத்த நாள் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். இதைத் தொடர்ந்து காப்பு கட்டுதல், படுகளம், வேடபரி, தேரோட்டம் என கோலாகலமாக நடைபெறுகிறது. கொங்கு மண்டலப் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நெல்லி வளநாட்டில் கூடிவருவார்கள். முதல் நாள் வீரப்பூரில் பெரியக்காண்டியம்மன், பொன்னர் - சங்கர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. 

பொன்னர் - சங்கர் கோட்டை எழுப்பி ஆட்சி புரிந்த நெல்லி வளநாட்டில் திருவிழா நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. வேட்டுவர் படைகளை வீழ்த்துவதற்காக பொன்னர் - சங்கர் படுகளம் சாய்ந்த நிகழ்வைப் போற்றும் படுகளத் திருவிழா தொப்பம்பட்டியில் நடைபெறுகிறது.  தொப்பம்பட்டியில் படுகளம் சாய்ந்தவர்களை பொன்னர் - சங்கர் உடன்பிறந்த தங்கை அருக்கானித் தங்காள் புனித நீர் ஊற்றி உயிர்த்து எழுப்பும் நிகழ்வுடன் இந்தத் திருவிழா தொடங்குகிறது.  

திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வேடபரி திருவிழா எட்டாம் நாள் நடைபெறுகிறது. மாலை 4.30 மணியளவில் குதிரை வாகனத்தில் அமர்ந்து பொன்னர் முன்னே செல்கிறார். பெரியக்காண்டியம்மன் யானை வாகனத்தில்  எழுந்தருளி அருள்பாலிக்கிறார். பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் குதிரை மற்றும் யானை வாகனங்களைச் சுமந்து வருகிறார்கள். பொன்னர் - சங்கரின் தங்கை அருக்காணித் தங்காள் கையில் தீர்த்தக் குடத்துடன் வேடபரி நிகழ்வில் வலம் வருகிறாள்.

மாலை 5.30 மணியளவில் வீரப்பூருக்கும்-அணியாப்பூருக்கும் இடையே உள்ள இளைப்பாற்றி மண்டபத்தில் பெரியக்காண்டியம்மனும், அருக்காணித் தங்காளும் ஓய்வெடுக்க, குதிரை வாகனத்தில் அமர்ந்து அணியாப்பூர் செல்லும் பொன்னர் மாலை 6.30 மணியளவில் அம்பு போட்டு இளைப்பாற்றி மண்டபம் திரும்பவதுடன் வேடபரி திருவிழா நிறைவு பெறுகிறது. வேடபரித் திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து, தேரோட்ட திருவிழா ஒன்பதாம் நாள் நடைபெறுகிறது. அன்றைய தினம் கோவில் முன்பு உள்ள பெரிய தேரில் பெரியக்காண்டியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். தொடர்ந்து, பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கும் தேரோட்டம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுகிறது. பத்தாம் நாள்  மஞ்சள் நீராட்டுடன் இந்தத் திருவிழா நிறைவு பெறுகிறது.

குல தெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபடுபவர்கள்தான் மாசித் திருவிழாவிற்கு போய்வர வேண்டுமென்பதில்லை. நீங்கள்கூட வீரப்பூர் திருவிழாவிற்கு ஒருமுறை நீங்கள் போய் வந்தால் பின்னர் தொடர்ந்து வருடாவருடம் போய் வருவீர்கள்.


ஆய்வு மற்றும் தரவுகள்

ஒரு மக்கள் குழுவினரிடையே வழங்கி வரும் அல்லது வழங்கி வந்த பாடல்கள், கதைகள், பழைய மரபுக்கதைகள், தொன்மங்கள், பழமொழிகள், புதிர்கள், நகைப்புகள் முதலான இலக்கியங்கள் நாட்டுப்புற இலக்கியங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. கொங்கு நாட்டுப் பகுதியில் பல நாட்டுப்புற இலக்கியங்கள் பல இடங்களில் மலர்ந்துள்ளன. அண்ணமார் சாமி கதை இவற்றுள் முன்னோடியானது. கிட்டத்தட்ட 400 - 450 ஆண்டுகளுக்கு முன் (கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில்) கரூர் பகுதிகளில் வரலாற்றுக் கதைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகின்றது.

வாய்மொழி மரபு வழியே பல காலம் வழங்கி வந்த அண்ணமார் சாமி கதையையும், கதைநிகழ்ச்சிகளையும், சம்பவத் தொடர்களையும் பின்னால் எழுதப்பட்ட நூல்கள் சற்று செம்மைப்படுத்தின. அண்ணமார் சாமி கதை பற்றி பற்பல புத்தகங்கள் உள்ளன என்றாலும் பிச்சை பட்டரின் "அண்ணமார் சுவாமி கதை", பெரிய எழுத்து கதைப் புத்தகமாக பாதிப்பிக்கப்பட்ட  பி.ஏ. பழனிசாமி புலவரின் "பொன்னழகரென்னும் கள்ளழகர் அம்மானை," "வரகுண்ணா பெருங்குடி கூட்டம் பொன்னர் சங்கர் வரலாற்று நூல்" மற்றும் எரிசினம்பட்டி இராமசாமியின்  "குன்றுடையான் வமிச வரலாறு" ஆகிய வரலாற்று நூல்களே உண்மையான கதையைக் கூறுவதாக நம்பப்படுகிறது. கவிஞர் சக்திக்கனல் (இயற்பெயர் கல்வெட்டுப்பாளையம் பெரியசாமி பழனிசாமி) அவர்கள் பதிப்பித்த பிச்சன் கவியின் “அண்ணன்மார் சாமி கதை” சிறு மரபில் (Little Tradition) தோன்றிய காப்பியம்.

அண்ணமார் சாமி கதையைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட மானுடவியல் அறிஞரான (Anthropologist) ப்ரெண்டா பெக்  (Brenda E.F. Beck) என்ற அமெரிக்க (from University of British Columbia), / கனடா நாட்டுப்  பெண்மணி (now living in Toronto) இது ஒரு நாட்டார் காப்பியம் என்று மதிப்பிடுகிறார்.  இவர் வீரப்பூர் பகுதிகளில் 1962 முதல் 1964 வரை அலைந்து திரிந்து தம் சொந்த செலவில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இவர் சேகரித்த ஆவணங்கள் 40 மணி நேர ஆடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே  இவ்வாய்வாளர் அண்ணன்மார் சாமி கதையை தமிழில் முதல் நாட்டார் காப்பியம் என்று  அடையாளப்படுத்தியுள்ள மதிப்பீடு மிகவும் பொருத்தமானதாகும்.

பொன்னர்- சங்கர் கதையை நாடகமாக (தெருக்கூத்து வடிவம் - பாடல், அதற்கான விளக்கமாக கொஞ்சம் வசனம்) நடித்துவரும் குழுக்கள் ஏராளம் உள்ளன. வீரப்பூர் திருவிழாக் காலங்களில் குறிப்பாக படுகளம் அன்றும் வேடபரித் திருநாளன்று இரவும் சுமார் நூறு நாடகக் குழுக்களேனும் ஆங்காங்கே மேடை போட்டு அண்ணன்மார் கதையை நாடகமாக நடித்து வரும் களமாக இன்றளவும் உள்ளது. குலதெய்வ வழிபாடு, வீரப்போர் நடந்த இடம் என்பதையெல்லாம் தாண்டி முத்தமிழில் ஒன்றான நாடகத் தமிழை வளர்க்கும் இடமாகவும் வீரப்பூர் உள்ளதென்றால் அது மிகையல்ல.

படிப்பினை (Lessons Learned)

அண்ணன்மார் சுவாமி கதை அல்லது அண்ணன்மார் சாமி கதை கொங்கு நாட்டின் தேசிய இலக்கியமாகக் கருதப்படுகிறது (national literature of Kongu Nadu).
முற்பகுதிக் கதையோ இரு சகோதரர்களின் அண்ணன்மாரின் பெற்றோராகிய குன்னடையான் தாமரை நாச்சியார் ஆகியோருடைய துன்பம் நிறைந்த வாழ்க்கையையும், இவர்களுக்குப் ஒறம்பற பங்காளிகளே இடையூறாக விளங்கியதையும் சித்தரிக்கின்றது. பிற்பகுதிக் கதை கொங்கு வெள்ளாளர் தலைவர்களாகிய பொன்னரும் சங்கரும் வேட்டுவர் தலைவராகிய தலையூர்க் காளியுடன் வீரப்போர் புரிந்து மடிந்து போவதை விவரிக்கிறது.

கொங்கு நாட்டு வெள்ளாளர்களின் சமூக அமைப்பு, பண்பாடு, வெகுளித்தனம் (வெள்ளை உள்ளம்), உண்மைக்காக உயிர் கொடுக்கும் பண்பு போன்ற அம்சங்களை அண்ணன்மார் சாமி கதை தெளிவாக விளக்குகின்றது.

"சோளம் குத்திப் போட்டுக் கஞ்சி குடித்தல், ஒன்றும் அறியாதானை வெள்ளை மனத்தானை, ‘மங்கு மசையா’ எனல், முறைப்பெண்ணை மணப்பதில் மகிழ்ச்சி, குடி கெடுப்பானைக் கூழை எனல், கருவேல மரத்தில் கட்டி அடித்தல், சாட்டால் பொதியளத்தல், கொங்கணக் கம்பளியும் போட்டுக் கொப்பிகட்டிய கவையும் ஊன்றி நடத்தல், தமுக்கடித்துச் செய்தியை ஊரார்க்கு அறிவித்தல், அம்பலத்துக்கு ஆணும் அடிக்கிளைக்குப் பெண்ணும் என்ற  பழமொழி, ‘அருள்வரப் பெறுதலைச் சன்னத்தம்’ ஆதல் எனல், இணுங்குச் சோளம் குத்தல், மணியம் கணக்குப்பார்த்தல், அஞ்சுமணிக் கயிற்றால் அடித்தல், குடைசீத்தை முள்ளைக் கோழியின் காலில் கட்டுதல், செம்பூலாஞ்செடி வனத்தில் புலி வாழ்தல், புரவிக்குப் புலிநகச் சங்கிலி அணிவித்தல், பல்லி சொல் கேட்டல், தெய்வங்களுக்குப் பூசைபோடுதல், குதிரையைப்பலவாறு அலங்கரித்தல், கனவு கண்டு சொல்லுதல், உடன் பிறப்பை எண்ண ஓரானைப்பலம் வரும் எனல், பிரம்புக் கூடையில் சோறு இடல், பல்லாங்குழியாடுதல், மாவிலங்க மரத்தில் மரநாழி கடைதல், அதன் மேல் பொன்முலாம் பூசுதல், ஊணான் கொடி பிடுங்கிக் கட்டுதல், தேங்காய் உடைத்து சகுனம் காணுதல், தாம்பூலம் தரித்தல் எனப் பற்பல செய்திகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன."

பல லட்சம் மக்கள் வந்து செல்லும் இந்த வீரப்பூர் மண் வீரம் விளைந்த மண். பாசத்தைச் சொல்லும் புண்ணிய பூமி. நம்பிக்கையைப் போற்றி வளர்த்த மனிதர்கள் வாழ்ந்த தலம்.  இவை எல்லாவற்றுக்கும் மேலாக சரித்திரத்தின் சாட்சி…!

மேற்கோள்கள்

  1. அண்ணன்மார் சுவாமி கதை. சக்திக்கனல். ஏழாம் பதிப்பு. 2001. சென்னை, நர்மதா பதிப்பகம்.  (download from Scribd) http://www.scribd.com/doc/28974760/%E0%AE%85%E0%AE%A3-%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9-%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B0
  2. அண்ணன்மார் சுவாமி கதை. http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?pno=1&book_id=237
  3. அண்ணமார் சுவாமி வீரவரலாறு. https://www.facebook.com/truegodannamar
  4. அண்ணமார் கதை எழுத்து மூலம் - பிச்சைப்பட்டன் (சக்திக்கனல் தொகுப்பு) உடுக்கடிக்கதை - பூளவாடி பொன்னுசாமி http://annamarstory.blogspot.in/2010/04/annamar-swami-kathai-pichai-pattan.html
  5. பொன்னர் - சங்கர் கதையில் புகையும் சர்ச்சை http://vettuvagoundersangam.blogspot.in/2011_04_01_archive.html
  6. எழுத்து மூலம் - பிச்சைப்பட்டன் (சக்திக்கனல் பதினைந்தாம் நூற்றாண்டு ஓலைச்சுவடியிலிருந்து தொகுப்பு) - Annamar swami kathai (Pichai Pattan ) full download link http://www.esnips.com/web/Annamarswamikathai.
  7. Annanmar Story. Sathy R. Ponnuswamy. Kongu.Us 
Youtube
THF அண்ணன்மார் கதை (கொங்குநாடு) by Subashini Tremmel


Ponnar Sankar Story Premkumar Balasubramaniam

Wednesday, November 19, 2014

அண்ணன்மார் சுவாமி கதை பகுதி 1: கொங்கு நாட்டின் தேசிய இலக்கியம்

பொன்னர், சங்கர், அருக்காணி நல்ல தங்கம் சிலைகள், வீரப்பூர்
பொன்னர், சங்கர், அருக்காணி நல்ல தங்கம் சிலைகள்
பொன்னர், சங்கர், அருக்காணி நல்ல தங்கம் சிலைகள்
நெல்லிவள நாடு வரைபடம்


'அண்ணன்மார் சுவாமி கதை' கொங்கு நாட்டில் காலகாலமாய் மக்களிடையே ஊறுப்பட்ட செல்வாக்குப் பெற்று வழங்கி வரும் உன்னதமான கதைப்பாடலாகும். புகழ்மிக்க இக்கதைபாடல்  ‘அண்ணன்மார் கதை’ மற்றும் ‘குன்னடையான் கதை’ என்ற பெயர்களில் அறியப்படுகின்றது. கொங்கு நாட்டின் மண்ணின் மைந்தர்கள் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள். வெள்ளாளக் கவுண்டர்களின் வரலாறு, கொங்கு மண்டல வரலாற்றோடு பின்னிப்பிணைந்துள்ளது. காடு கொன்று, நாடாக்கி, குளம் தொட்டு, வளம் பெருக்கி, கோயில் எடுத்துப் பல இடங்களில் குடியேறிப் பல்கிப் பரந்து பெருகி வாழும் சமுதாயம் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள் சமுதாயம். பழங்காலத்தில் விசயஸ்கந்தபுரத்தை தலைநகராகக் கொண்டு கொங்கு தேசத்தை கவுண்டர்கள் ஆண்டதாக கொங்கு தேசராசாக்கள் என்னும் நூல் சொல்கிறது. விஜயநகர அரசு வம்சம் தமிழகத்தில் வேரூன்றுவதற்கு முன்பிருந்தே கொங்கு வேளாளக் கவுண்டர்கள் கொங்கு நாட்டின் பகுதிகளை ஆண்டு வந்துள்ளதாகத் தெரிய வருகிறது. விஜய நகர அரசர்கள் கொங்கு நாடு உட்பட்ட தமிழகத்தை பல்வேறு குறுநிலங்களாகப் பிரித்து அமைத்தார்கள். இந்த குறுநிலங்களின் பகுதிகளை கவுண்டர்களும் குறுநிலத் தலைவர்களாக இருந்து பரிபாலனம் செய்து வந்திருக்கின்றனர்.

இந்த கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள் கொங்கு மண்ணின் சாமியாகக் கும்பிடும் அண்ணன்மார் என்கிற பெரிய அண்ணன் பொன்னர், சின்ன அண்ணன் சங்கர் என்ற அண்ணன் தம்பியின் சரித்திரத்தைச் சொல்லும் வீரப்பாடல் (Heroic Ballad) இது.  பொன்னர் சங்கர் கதை இவர்களின் தங்கையின் பார்வையிலிருந்தே நகர்ந்ததால், மக்கள் வழக்கில் ‘சின்ன அண்ணன் பெரியண்ணன் கதை’ என்றும் அடையாளப்படுத்துகின்றனர். பொன்னர் சங்கர் சகோதரர்கள் எவ்வாறு தங்கள் நெல்லி வளநாட்டை அமைத்தார்கள், வேட்டுவ கவுண்டர்கள் தலைவனின் சூழ்ச்சிக்கு எதிராக எவ்வாறு தாக்கு பிடித்தார்கள், தங்கள் நாட்டை காக்க எப்படியெல்லாம் போராடினர்கள் என்றெல்லாம் அண்ணன்மார் சாமி கதை நமக்குச் சொல்கின்றது.

Friday, November 7, 2014

இந்திரா விஸ்வநாதன் பீட்டர்சன்: இந்திய இயல் மற்றும் சம்ஸ்கிருத அறிஞர்


நன்றி: தி இந்து ஜனவரி 13, 2011
 
 

பேராசிரியர் இந்திரா விஸ்வநாதன் பீட்டர்சன்


டாக்டர். இந்திரா விஸ்வநாதன் பீட்டர்சன், அமெரிக்க நாட்டில் மாஸாசூஸட்ஸில் அமைந்துள்ள மௌண்ட் ஹோல்யோக் கல்லூரியில் டேவிட் பி. ட்ரூமேன் ஆசியத் துறை பேராசிரியராக 1982 லிருந்து பணியாற்றி வருகிறார். இவர் டில்லியில் பிறந்து மும்பாயில் வளர்ந்த இந்தத் தமிழ் பெண்மணி ரூய்யா கல்லூரியில் 1971 இல் ஆங்கில இலக்கியத்தில் பி.ஏ. ஹானர்ஸ்; தொடர்ந்து ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் சம்ஸ்கிருதத்தில் எம்.ஏ. (1974) இந்திய இயல் மற்றும் சம்ஸ்கிருதத்தில் டாக்டர் பட்டம் (1976) பெற்றுள்ளார். உலக அளவில் சிறந்த சம்ஸ்கிருத அறிஞரும் ஹார்வார்டு பல்கலைக்கழக பேராசிரியருமான டாக்டர். டேனியல் இங்கால்ஸிடம் சம்ஸ்கிருத இலக்கியம் பயின்றுள்ளார். தமிழ், ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம், ரஷ்யன், ஜெர்மன், ஃப்ரெஞ்சு மற்றும் கிரேக்கம் ஆகிய 12 மொழிகளில் பேசவும் எழுதவும் வல்லவர்.  

Monday, November 3, 2014

காரி நாயனார் எழுதிய கணக்கதிகாரம்: வெண்கலம் மற்றும் பித்தளை பற்றிய தமிழர்களின் உலோகக்கலை

கணிதக் கலையின் முக்கியத்துவம் கணக்கதிகாரம் என்ற நூலால் புலப்படும்.  காரி நாயனார்  என்ற புலவரால் கணக்கதிகாரம் என்னும் கணித நூல் 15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.  இவர் காவிரி பாயும் சோழநாட்டின் கொறுக்கையூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். மன்னர் வழி வந்த இவரின் தந்தை பெயர் புத்தன்.

"கொறுக்கையர் கோமான் புத்தன் புதல்வன் காரி"

"பொன்னி நாட்டு பொருந்திய புகழோன்...
புத்தன் புதல்வன் கறியென்பவனே."

என்று இந்நூலின் சிறப்புப் பாயிரம் சொல்கிறது.

கணக்கதிகாரத்தில்  அப்படி என்னதான்  இருக்கிறது?

கணக்கதிகாரம் செய்யுட்கள் வெண்பா, கட்டளைக்கலித்துறை மற்றும் நூற்பாக்களால் ஆனது. இந்நூலில் ஆறு பிரிவுகளில் 64 வெண்பாக்களும், 45 புதிர் கணக்குகளும் உள்ளன: நிலம் வழி (23 பாக்கள்), பொன் வழி (20 பாக்கள்), நெல் வழி (06 பாக்கள்), அரிசி வழி (02 பாக்கள்), கால் வழி (03 பாக்கள்), கல் வழி (01 பாக்கள்), பொது வழி (05 பாக்கள்) என்ற ஆறுவழிக் கணக்குகளையும் புலவர் அறுபது செய்யுள்களால் உணர்த்தினார் என்பதை:

"ஆதிநிலம் பொன்னெல் லாரிசி யகலிடத்து
நீதிதருங் கால் கல்லே நேரிழையாய் - ஓதி
உறுவதுவாகச் சமைத்தேன் ஒன்றெழியா வண்ணம்
அறுபது காதைக்கே யடைத்து."

ஆறு வழிக் கணக்கு மட்டுமல்லாது வேறு பல கணக்குகளையும் இந்நூலில் நீங்கள் பார்க்கலாம். இக்கணக்குகள் கற்பவர்க்கு திகைப்பும், வியப்பும், நகைப்பும், நயப்பும் விளைவிக்கும் என்பது திண்ணம்.

Thursday, October 30, 2014

உச்ச நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கைகள் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கிய கருப்புப்பணத்தை மீட்டு வருமா?

picture courtesy: nripulse.com
கருப்புப் பணம் என்றால் என்ன? அரசு இயங்க வரிப்பணம் அவசியம். இந்திய அரசு மக்களிடம் இருந்து வாங்கிய வரிப்பணத்தில் இயங்குகிறது. கருப்புப் பணம் (Black Money) என்பது இந்தியாவில் கருப்புச் சந்தைகளில் (Black Market) சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணம். இதற்கான வருமான வரி (Income Tax) மற்றும் இதர வரிகள் இதுவரை கட்டப்படவில்லை என்றால் அது கணக்கில் வராத பணம். இவ்வாறு வரியே கட்டாத பணத்தை, கருப்பு பணம் என்று சொல்கிறோம். எந்தெந்த தொழில் செய்ய அனுமதி இல்லையோ, அதாவது தடை செய்யப்பட்ட தொழிலைச் செய்து சம்பாதித்த பணமும் கருப்பு பணமாகிறது.

வரி கட்டாமலும், முறைகேடாகவும் சம்பாதித்த கருப்புப் பணத்தை இந்தியாவில் வைத்திருந்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால் இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் வைப்புத் தொகையாக (deposits) வைத்துள்ளார்கள்.

அது சரி! இந்தியர்கள் வெளிநாட்டில் உள்ள வங்கிகளில் ஏன் வைப்புத் தொகையாக வைக்கிறார்கள்?  வெளிநாடுகளில் குறிப்பாக சுவிட்சர்லாந்து நாட்டுக்கு என்று ஒரு கொள்கை உள்ளது. இங்கு வரியே கட்டாத கருப்புப் பணத்தைக் கூட வைப்புத் தொகையாக வைத்திருந்தாலும், இவர்களின் பெயர் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களை வெளியிடாமல் இரகசியமாகவே வைத்திருப்பார்கள். எனவே சுவிட்சர்லாந்து கருப்புப் பணத்தைப் பதுக்க பாதுகாப்பான நாடு  என்று உலக அளவில் உள்ள வரி ஏய்ப்பவர்கள் நம்புகிறார்கள்.

Monday, October 27, 2014

ஜடாயு வதம் கூடியாட்டம்: ஸ்மாரகா கலாபீடம் சென்னை மஹாலிங்கபுரத்தில் நிகழ்த்திய நாட்டிய நாடகம்

ஜடாயு வதம் கூடியாட்டம்
இராவணனாக கிருஷ்ணகுமார், துறைத் தலைவர், கூடியாட்டம் நாடகத் துறை, ஸ்ரீ சஙகரசார்யா சமஸ்கிருதம் யுனிவர்சிட்டி
ஜடாயு வேடம் பைங்குளம் நாராயண சாக்கியார் 
பைங்குளம் நாராயண சாக்கியார்   கூடியாட்டம் என்ற சாக்கியக் கூத்து பற்றியும் ஜடாயுவதம் நாட்டிய நாடகம்  பற்றியும் சிற்றுறை நிகழ்த்தினார்.
பேஸ்புக்கில் ஒரு நாட்டிய நாடக நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு அது.  'ஜடாயுவாதம்', என்ற கூடியாட்டம் நாட்டிய நாடகம் 2014, ஜூலை 26 ஆம் தேதி உத்தரியம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை மஹாலிங்கபுரம், நம்பர் 18 சார் மாதவன் நாயர் ரோடில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

கதகளி.. மோகினி ஆட்டம், தெய்யம், துள்ளல் பற்றியெல்லாம் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன்.  கூடியாட்டம் என்றால் அதுவரை என்னவென்றே தெரியாது. இது சக்திபத்ரா எழுதிய ஆச்சர்யசூடாமணி என்ற நாட்டிய நாடகத்தைத் தழுவியது என்று தெரிந்தது. ஜடாயு வாதம் நாட்டிய நாடகம் பைங்குளம்  ராம சாக்கியர் ஸ்மாரகா கலாபீடம் சார்பில் அரங்கேற்றப்படுகிறது. ராம சாக்கியரின் மைத்துனர் பைங்குளம் நாராயண சாக்கியார் ஒரு சிறந்த நாட்டிய நாடகக் கலைஞர்.

மாலை ஆறு மணி அளவில் நாட்டிய நாடகம் தொடங்கும் முன் பைங்குளம் நாராயண சாக்கியார்   கூடியாட்டம் என்ற சாக்கியக் கூத்து பற்றியும் ஜடாயுவதம் நாட்டிய நாடகம்  பற்றியும் மலையாளம் கலந்த ஆங்கிலத்தில் ஒரு சிற்றுறை நிகழ்த்தினார். பலருக்கு இது மிகவும் உபயோகமாயிருந்திருக்கும். மலையாளிகளே கூடியாட்டம் பற்றி அவ்வளவு பரிச்சயம் இல்லாமல் இருந்தார்கள். நாராயண சாக்கியார் 'இந்த சமஸ்கிருத நாட்டிய நாடக வடிவம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது' என்றார்.   இந்திய நாட்டிய நாடக அரங்கம் குறித்த சாஸ்திரிய விதிமுறைகள்  பற்றியெல்லாம்  பழம்பெரும் நாடகக்கலை எழுத்தாளர் 'பாஷா' என்ற நாட்டிய சாஸ்திர நூலை இயற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார்.  இந்தக் கூடியாட்டம் சமஸ்கிருத நாட்டிய நாடகம் பாஷா நாட்டிய சாஸ்திர விதிகளின் படியே எழுதி நடிக்கப்படுகின்றன என்கிறார் நாராயண சாக்கியார் .

கூடியாட்டம் என்பது 1. நாட்டியம் (நடிப்பு மற்றும் முகபாவனை), 2. நிருத்தம் அல்லது ஆட்டம், 3. கீதம் அல்லது பாட்டு மற்றும் 4. வாத்தியம் (தோற்கருவிகள் மூலம் இசைக்கப்படும் இசை) ஆகிய எல்லாம் சேர்ந்த கலவையாகும். 

Saturday, October 25, 2014

லுமோசிட்டி: ஆன்லைன் விளையாட்டுக்கள் மற்றும் மனப்பயிற்சிகள் அறிவுத்திறனை அதிகரிக்க உதவுமா?

 

லுமோசிட்டி பற்றி சிறப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அறிவாற்றல் பயிற்சி குறித்த வலைத்தளம் (Website).  சரி லுமோசிடியில் அப்படி என்னதான் இருக்கிறது? லுமோசிட்டி ஒருவருக்குத் தேவையான அறிவுத்திறன் குறித்து பயிற்சியளிக்கும் (cognitive-training) விளையாட்டுக்களின் தொகுப்பு (series of games)  மற்றும் மனப்பயிற்சிகள் (mental exercises).

லுமோசிட்டி, கலிபோர்னியா மாநிலம், சான்பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள ஒரு இணையதள நிகழ்நிலை (ஆன்லைன் online) அறிவாற்றல் திறன் பயிற்சியளிக்கும் (cognitive-training) நரம்பியல் ஆய்வு நிறுவனம் (neuro science research lab.) ஆகும். குணால் சர்கார் (Kunal Sarkar), மைக்கேல் ஸ்கான்லோன் (Michael Scanlon) மற்றும் டேவிட் ட்ரெஷர் (David Drescher) என்ற மூவர் கூட்டணி லுமோஸ் லாப் என்ற லுமோசிட்டி நிறுவனத்தை 2005 ஆம் ஆண்டு துவக்கியது; லுமோசிட்டி.காம் வலைத்தளம் 2007 முதல் செயல்படுகிறது; லுமோசிட்டி மொபைல் அப்ளிகேஷன்கள் பத்து முதல் இருபத்தைந்து மில்லியன் சந்தாதார்களால் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன என்கிறது புள்ளி விபரம்.

Thursday, October 23, 2014

தஞ்சை பெரிய கோவில் அகழிகளைப் புதுப்பிக்கும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள்


தஞ்சை கலெக்டர் நேரில் ஆய்வு நன்றி: படங்கள் தி இந்து
தஞ்சை கலெக்டர் படகு சவாரியைத் துவக்கினார் நன்றி: படங்கள் தி இந்து
புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. தமிழகம்,   வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் தஞ்சாவூருக்கு வந்து செல்கின்றனர்.

இந்தப் பதிவு சுற்றுலா புள்ளிவிவரங்கள் பற்றியில்லை.

தஞ்சை நகரில், 'அடிப்படை வசதிகள் இல்லை சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் இல்லை' என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.
உலகப் பாரம்பரிய சின்னமாக விளங்கி வரும் பிரசித்தி பெற்ற இக்கோவிலைச் சுற்றி  நான்குபுறத்திலும் அகழி மற்றும் கோட்டைச்சுவர்கள் உள்ளன. தஞ்சை நகரை சுற்றியும் புரதான அகழிகள் உள்ளன. ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பே நாயக்க மன்னர்களின் ஆட்சியில் தஞ்சை நகரில் பெய்யும் மழையால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை வடிய வைப்பதற்கும், மழைநீரை சேமிக்கவும், கோட்டையை   எதிரிப் படைகளிடமிருந்த் காக்கவும் இந்த அகழிகள் தோண்டப்பட்டனவாம். தஞ்சை மன்னர்கள் நீர் மேலாண்மை தொழில் நுட்பத்தில் அறிவும் ஆற்றலும் கொண்டவர்கள் ஆதலால், தஞ்சை அகழிகளைச் சிறந்த முறையில் திட்டமிட்டு உருவாக்கி அமைத்துள்ளார்கள்.

இது வரலாறு. வரலாறு பற்றி நிறைய பேசிவிட்டார்கள். அகழிகள் மற்றும் மதில்களின் தற்போதைய நிலமை என்ன?

Monday, October 20, 2014

மாசி பெரியசாமி: கொல்லிமலையில் நாட்டார் தெய்வ வழிபாடு


மாசி பெரியசாமி: கொல்லிமலையில் நாட்டார் தெய்வ வழிபாடு



தமிழர்கள் நாட்டார் தெய்வ வழிபாட்டில் மிகவும் நம்பிக்கை கொண்டவர்கள். பொதுவாக நாட்டார் தெய்வ வழிபாட்டில் மூன்று விதமான வழிபாடுகளைக் காண இயலும். ஊர்க் காவல் தெய்வ வழிபாடு, கிராம தெய்வம் அல்லது கிராம தேவதை வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு போன்ற வழிபாடுகள் நாட்டார் தெய்வ வழிபாட்டு மரபு எனலாம். குலதெய்வ வழிபாட்டில் இறந்து போன தனது முன்னோர்களையும், தாய், தந்தையரையும் வழிபடத் தொடங்கினர்.

பெண் தெய்வ வழிபாடுகள்

தன்னுடைய சந்ததிகள் பெருகுவதற்கு பெண்ணிடம் மிகுந்த சக்தி இருப்பதை உணர்ந்து பெண்ணைத் தெய்வமாக வழிபட ஆரம்பித்தனர். நாட்டுப்புறத் தெய்வங்களில் தாய்த் தெய்வங்கள் மற்றும் கன்னித் தெய்வங்கள் ஆகிய பெண்தெய்வங்களே மிகுதி எனலாம். இறந்து போன கன்னிப்பெண்கள், பத்தினிப்பெண்கள், மானம் காப்பதற்காக உயிரைத் துறந்தவர்கள், வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த பெண்கள் எல்லாம் பெண் தெய்வங்களாயினர். உதாரணம் - அங்காளம்மன், இசக்கி, உச்சிமாகாளி, எல்லையம்மன், கண்டியம்மன், காளியம்மன், சீலைக்காரியம்மன், சோலையம்மன், திரௌபதையம்மன், பேச்சியம்மன், பேராச்சி, மந்தையம்மன், முத்தாலம்மன், வீருசின்னம்மாள், நாச்சியம்மன், ராக்காச்சி, ஜக்கம்மா போன்றோர்.

காவல் தெய்வ வழிபாடுகள்

இது போல பல குடும்பங்கள் அல்லது சமூகம் அல்லது நாடு விளங்க தங்கள் இன்னுயிரைக் கொடுத்து காப்பாற்றிய ஆண்கள், போரில் மாண்டவர்கள், தவறாகத் தண்டிக்கப்பட்டு பின்னர் குற்றமற்றவர் எனத் தெரிந்துகொண்டு மரியாதை செய்யப்படுபவர்கள் எல்லாம்   காவல் தெய்வங்களாக ஊருக்கு வெளியே வைத்து வணங்கப்படுகிறார்கள். உதாரணம் - ஐயனார், கருப்பசாமி, காத்தவராயன், மதுரைவீரன், சுடலைமாடன் போன்ற தெய்வங்கள். சில ஆண் தெய்வங்கள் பரவலாக வணங்கப்படுவதால் இவை சில முதன்மைத் தெய்வங்களாயின. குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் வணங்கப்படும் பல ஆண் தெய்வங்கள் துணைமைத் தெய்வங்களாயின.

மாசி பெரியசாமி ஒரு காவல் தெய்வ வழிபாடு

மாசி பெரியசாமி ஒரு துணைமை (கிராம) காவல் தெய்வம். இவருக்கு சங்கிலி கருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் என்று பல பெயர்கள் உண்டு. நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையின் உச்சியில் உள்ள மாசிக் குன்றில் வாழம்புல் என்ற ஒருவகை புல்லினால் அமைத்த சிறிய கூரைக் கட்டிடத்தில் இவருக்குக் கோவில் அமைந்துள்ளது.  மாசி பெரியசாமி வேங்கை வாகனத்தின் மேல் அமர்ந்து கானகம்பீரமாக காட்சியளிக்கிறார்.

Wednesday, October 15, 2014

ரேடியோ கார்பன் டேட்டிங் சோதனை முறைகள் தொன்மப் பொருட்களின் வயதினை மெய்ப்பிக்க உதவுகின்றனவா?

Picture Courtesy: Radiocarbon Dating. Science Courseware

தமிழகத்தில் நடந்த, அகழாய்வுகளில், ஆதிச்சநல்லூர், கொடுமணல், பொருந்தல் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட  வரலாற்றுச் சிறப்பு மிக்க அகழ்வாய்வுகள் மூலம் தமிழர்களின் நாகரிகம், சிந்து-சமவெளி நாகரிகத்துக்கு முற்பட்டது என்பதற்கான தரவுகள் கிடைத்துள்ளன.

இந்திய தொல்லியல் துறையின், சென்னை வட்டம் 2004 ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் (திருநெல்வேலி சமீபம்) மேற்கொண்ட அகழாய்வில்  2800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த முதுமக்கள் தாழியில் அடைத்து புதைக்கப்பட்ட 12 மனித எலும்புக்கூடுகள் சற்றும் கலையாத நிலையில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இக்கண்டுபிடிப்புகள் தமிழ் நாட்டில் நிலவிய பண்டைய பெருங்கற்கால வரலாறு மற்றும் தமிழ் கலாசாரத்தை அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்க உதவும் என்று தொல்லியல் அறிஞர்கள் கருகின்றனர்.  பெருங்கற்கால நாகரிகமே தென்னிந்தியாவின் மிகவும் பழைமையான நாகரிகம் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். என்றாலும் இவ்வகழ்வாய்வுக் கண்டுபிடிப்புகள் பெருங்கற்காலத்திற்கும் முந்தையது எனலாம். (தி இந்து (ஆங்கிலம்) ஏப்ரல் 3, 2005)

2010-ஆம் ஆண்டு நடந்த பொருந்தல் அகழாய்வில் (பழநி அருகில் உள்ள ஊர்) ஒரு கல்லறையைத் தோண்டும்போது அங்கு இருந்த பெரிய ஜாடியில் 2 கிலோ நெல் கிடைத்‌திருக்கிறது - முதல் தடவையாக தமிழகத்தில் நெல் கிடைத்‌திருக்கிறது. தானியங்களை காலக் கணிப்பு செய்ய கார்பன் டேட்டிங்கை விட நவீன முறையான ஆக்ஸிலேட்டர் மாஸ் ஸ்பெக்ட்டேராமெட்ரி முறையில் செய்தபோது காலக் கணிப்பு கி.மு. 490 என்று வந்தது. அமெரிக்காவில் உள்ள பீட்டா அனலிட்டிக்கல் ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பியபோது இந்தக் காலக் கணிப்பு வந்தது அதாவது இந்த நெல் கிறிஸ்து பிறப்பதற்கு 490 ஆண்டுகளுக்கு முன், இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முந்தையது.

கொடுமணல் ஆய்வில் 10 செ.மீ., ஆழத்தில் எடுத்த மாதிரியினை பீட் அனலிட்டிகல் சோதனைக் கூடத்திற்கும் 20 செ.மீ., ஆழத்தில் எடுத்ததை அரிசோனா பல்கலைக் கழகத்திற்கும் அனுப்பினோம். இரண்டு ஆய்வுகளும் முரண்படுகின்றனவா என்று பார்த்தபோது கச்சிதமாக இரண்டும் ஒரே மாதிரி இருந்தன. அதனால் இதன் காலம் என்பது கி.மு. 2 முதல் 6 வரை இருக்கும் என முடிவு செய்தோம்.  (புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் பணியாற்றிவரும் பேராசிரியர் ராஜனுடன், ‘புதிய தலைமுறை’ ஆசிரியர் மாலன் நிகழ்த்திய உரையாடலில் இருந்து...)

தொல்லியலாளர்கள் அகழ்வாயுவின் போது பூமியில் புதையுண்ட எலும்புக் கூடுகள், நெல், இரும்புப் பொருட்கள், மணிக்கற்கள், வளையல் துண்டுகள், மட்பாண்ட ஒடுகள், சுட்ட களிமண் பொம்மைகள் போன்ற பொருட்களை அகழ்ந்தெடுக்கிறார்கள். தொல்லியல் அறிஞர்கள் அகழ்ந்தெடுத்த தொன்மப் பொருட்களின் காலம் பற்றி எவ்வாறு தெரிந்து கொள்கிறார்கள்? என்னென்ன சோதனை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன? இச்சோதனை முறைகள் எவ்வாறு செயல்படுகின்றன? இப்பதிவு ரேடியோ கார்பன் டேட்டிங் மற்றும் தொன்மப் பொருட்களின் காலம் மெய்ப்பிக்கப்படுவது பற்றியது.
இவ்வாறு புதையுண்ட கரிமத் தொல்பொருள்களின் (organic artifacts) வயதினை மெய்ப்பிக்கப் பயன்படுத்தப்படும் சோதனை ரேடியோ கார்பன் டேட்டிங் என்று அழைக்கப்படுகிறது. இம்முறையைப் பயன்படுத்தி கனிமத் தொல்பொருள்களின் (inorganic artifacts) வயதை நிர்ணயம் செய்ய இயலாது என்கிறார்கள். ஏன் முடியாது?

Sunday, October 12, 2014

ஜெயலலிதா விடுதலைக்காக மதுரையை ஸ்தம்பிக்க வைத்த காவடி திருவிழா

பால்குடம், வேல்குத்துத்தல், பறவை காவடி என்று நடத்தி மதுரையை ஸ்தம்பிக்க வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜு
வேல் குத்துதுதல் அமைச்சர் ஊர்வலம்
நன்றி: படங்கள்: பா.காளிமுத்து, ஈ.ஜெ. நந்தகுமார் விகடன் செய்திகள்

அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் போன்றவர்களை பல நகரின் பொது இடங்களில் சர்வசாதாரணமாகப் பார்க்க முடிகிறது. மாநிலத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தினந்தோறும் அம்மாவுக்காக கட்அவுட்டுகள், வால்போஸ்டர்கள், கட்சிக்கொடிகள், ஒலிபெருக்கிகள், கொடிகளுடன் இங்கும் அங்கும் அலையும் தொண்டர்கள் நிறைந்த வாகனங்கள், பாதுகாப்புக்காக போலீஸ் கூட்டம், டிராபிக் ஜாம் எல்லாம் சகஜமாகிவிட்டது. வெள்ளை வேட்டிகள் ஆங்காங்கே உண்ணாவிரதப் போராட்டப் பந்தல்களில் அமர்ந்தபடி முழங்குகிறார்கள்.

தமிழகத்தின் பல்வேறு திருக்கோயில்களில் பல லட்சக்கணக்கானோர்களால் பிரார்த்தனையும், சிறப்பு வழிபாடும் நடைபெற்று வருகிறது.  லட்சக்கணக்கான பொதுமக்களும் போராட்டம், மனிதச்சங்கிலி, உண்ணாவிரதம், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முடி காணிக்கை அளித்து சிறப்பு வழிபாடுவதாக செய்தித்தாள்களில் தினமும் செய்திகள் வருகின்றன.

கும்மிடிப்பூண்டி அடுத்த அரியத்துறையில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமையான அருள்மிகு மரகதவள்ளி சமேத வரமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் சிறுபான்மை துறை அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க-வினர் அம்மா விடுதலை பெறக் கோரி சிறப்பு யாகம் நடத்தினர்.

மக்கள் அனுபவிக்கும் இன்னல்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் இவர்கள் அன்றாடம் நடத்தி வரும் பல போராட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை நாள்தோறும் ஸ்தம்பிக்கும் அவலம் தொடர்கதையாகி வரவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும் குரல் எழுப்ப ஆரம்பித்ததையடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இனி போராட்டங்கள் நடத்த வேண்டாமென்று அறிவித்தார். 'போராட்டம் கூடாது, அமைதி காப்பதே அம்மாவுக்கு செலுத்தும் உண்மையான அன்பு' என்றார்.

இதற்குப் பிறகும் மக்களிடம் இவர்களது செல்வாக்கை காட்டுவதற்காகவும், முக்கியமாக பெங்களூருவில் சிறையிலிருக்கும் ஜெயலலிதா,  இவர்களுடைய விசுவாசத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் அ.தி.மு.க. அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் பல நூதனமான நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறார்கள்.

அமைச்சர் செல்லூர் ராஜு நடத்திய 'காவடி திருவிழா' இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தார் போன்றது என்று மீடியாக்கள் சொல்கின்றன. இவர் நடத்திய நூதனத் திருவிழாவில் பால்குடம், வேல்குத்துத்தல், பறவை காவடி என்று பல அய்ட்டம்களை ஒருங்கிணைத்து மக்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளார் என்கிறார்கள். மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள வைகையாற்றில் பல நூறு பெண்களை வாகனங்களில் ஏற்றி வந்து, ஒரு சில்வர் குடம், பாக்கெட் பால், தேங்காய் எல்லாம் கொடுத்து பால்காவடி ஊர்வலம் நடத்தியதுடன்  ஆளுக்கு நூறு ரூபாயும் கொடுத்தாராம்.. மொட்டை போட்டால் (மக்களுக்குத்தான்) 500 ரூபாய், வேல் குத்திக் கொள்பவர்களுக்கு 2000 ரூபாய், பறவை காவடி எடுத்தால் 10000 ரூபாய் என்று ரேட் போட்டு பணம் கொடுத்தார்களாம்.

வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில்: 'சென்னை ஃ போட்டோ வாக்'

வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில்: 'சென்னை ஃ போட்டோ வாக்' 

தேவை ஒரு கேமெரா (Camera). டி.எஸ்.எல்.ஆர். (D.S.L.R) அல்லது எஸ்.எல்.ஆர். (S.L.R.) அல்லது மொபைல் கேமெரா (Mobile Camera) இவற்றில் எதேனும்  ஒன்று. கேமெரா இல்லாவிட்டாலும் பரவாயில்லை நீங்கள்  சென்னை ஃ போட்டோ வாக்கில் இணைந்து கொள்ளலாம். மாதத்தில் இரண்டு முறை - இரண்டாவது வாரம் மற்றும் நான்காவது வாரம். சென்னையில் ஏதாவது ஒரு இடம் தேர்வு செய்து தகவல்கள் -  ஃ போட்டோ வாக் தேதி, நேரம், சந்திக்கும் இடம், செல்ல வேண்டிய ரூட் (ரூட் மேப்புடன்)  ஃ பேஸ்புக் குரூப்பில் வெளியிடுவார்கள். இளைஞர்கள், இளைஞிகள், சீனியர் சிட்டிசன்ஸ் உட்பட அனைவரும் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து ஹாய் சொல்லி கைகுலுக்கிய பின்பு  சென்னை சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து புறப்பட்டு புகைப்படம் எடுப்பது வே(வா)டிக்கை.

இவ்வாறு நங்கள் சென்ற 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17 ஆம் தேதி  சென்று வந்த இடம் வேளச்சேரி விஜய நகரில் உள்ள தண்டீஸ்வரர் ஆலயம். ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவில். சோழ மன்னர்கள் தொண்டை மண்டலத்தில் கட்டிய முதல் சிவன் கோவில். வேளச்சேரி பண்டைய சோழநாட்டின் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில், கோட்டுர்புரம் வட்டத்தில் அமைந்திருந்ததாம். வேளச்சேரிக்கு தண்டீசுவரம் என்ற பெயரும் உண்டு.

கட்டிடக்கலை

ஐந்து நிலை இராஜகோபுரம். சுவாமி சன்னதி: ஏகதள விமானம் கருங்கல் கட்டுமானம்; பாதபந்த அதிட்டானம், பாதச்சுவர், பிரஸ்தாரம், பூதவரி; செங்கல் கட்டுமானம் நாகர தளம், வேசர சிகரம். அம்மன் சன்னதி ஏகதள திராவிட விமானம்; கருங்கல் கட்டுமானம்; செங்கல் கட்டுமானம் திராவிட தளம் மற்றும் சிகரம்.
  
கோவிலில் இரண்டு பிரகாரங்கள். முதலாம் பிரகார கோஷ்ட சன்னதிகளில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை. தனி சன்னதிகளாக சண்டிகேஸ்வரர், லட்சுமி, வீணா சரஸ்வதி, பைரவர் மற்றும் தேவியருடன் சுப்பிரமணியர். இரண்டாம் பிரகாரத்த்தில் அமர்ந்த நிலையில் வீரபத்திரர். கொடிமரம் பலிபீடம்.

இங்குள்ள துவாரபாலர்களின் சிற்பங்கள் பல்லவ சிற்பங்களின் சாயலைப்பெற்றுள்ளதால் பல்லவ மன்னன் தந்தி வர்மன் தொடர்பு இருக்கலாமா என்று அறிஞர்கள்  யூகிக்கிறார்கள்.

கல்வெட்டுக்கள்

இக்கிராமம் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட கொடையாகும். எனவே வேளச்சேரி ஒரு பிரம்மதேயம், ஒரு வரலாற்றுத் தீர்வு (Historic settlement) என்பது கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் ஆவணகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்மதேய கிராமங்களின்  மகா சபை என்றழைக்கப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் உயர்குடி அந்தண நிலச்சுவான்தார்களால் நடத்தப்பட்டுள்ளது.  மகா சபைகளின் அன்றாட நடவடிக்கைகள், பதிவுகள், நிலக்கிரையங்கள், கொடைகள் யாவும் கோவில் கருவறை சுவர்களில் (வெளிப்புறம்) கல்வெட்டுக்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன.  முதலாம் இராசராச சோழனின் தந்தை சுந்தர சோழன் தண்டீஸ்வரருக்கு 10-ம் நூற்றாண்டில்  எடுப்பித்த கோவில் என்று கருவறை சுவர்களில் உள்ள இக்கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகின்றன. இக்கிராமம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 - 1120) ஆட்சியாண்டுகளில் இவர் மனைவி பெயரால் தினச்சிந்தாமணி சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுக்கள்  இக்கோவிலில் ஒரு கிராம சபை திறம்பட உள்ளாட்சி நிர்வாகம் செய்த செய்தியினைத் தருகின்றன. இக்கிராமத்தில் இன்றும் வழிபாட்டிலிருக்கும் இரண்டு பழம்பெரும் சோழர்காலக் கோவில்களைக் காணலாம்.  முதலாவது, கண்டாராதித்த சோழன் (கி.பி. 949-957AD) ஆட்சி காலக் கல்வெட்டுக்களுடன் அமைந்த, தண்டீச்வரர் கோவில். மற்றொன்று செல்லியம்மன் கோவில். செல்லியம்மன் கோவில் ஏழு கன்னிமார்களுக்காக எடுப்பிக்கப்பட்டதாம். இவற்றுடன் மண்ணில் புதைந்திருந்த பல விஷ்ணு திருமேனிகள் இக்கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தவிர இக்கிராமத்தைச் சுற்றிலும் சில பழம்பெரும் வைணவ ஆலயங்கள் உள்ளன.
Related Posts Plugin for WordPress, Blogger...