Tuesday, August 4, 2015

உங்கள் குழந்தையைத் தெரிந்துகொள்ளுங்கள் - 6


குழந்தையின் வளர்ச்சியை ஐந்து பருவங்களாகப் பிரிக்கலாம்:

சிசுப் பருவம் என்பது -     0-1 ஆண்டுகள்
குறுநடைப் பருவம் என்பது -     1- 3 ஆண்டுகள்
பள்ளி முன் பருவம் என்பது     3-6 ஆண்டுகள்
பள்ளிப்பருவம் என்பது -     6- 10 ஆண்டுகள்
குமாரப் பருவம் என்பது -     10-20 ஆண்டுகள்


உடல் வளர்ச்சி

 

உடல் வளர்ச்சி, குழந்தை வளர்ச்சியின் ஒர் அடிப்படைக் கூறாக உள்ளது. வளர்ச்சி என்பது குழந்தையின் உடலில் உள்ள செல்கள் திசுக்களின் பெருக்கத்தால் ஏற்படும் உயரம் மற்றும் எடை பெருக்கத்தை குறிப்பதாகும். வயதுக்கு ஏற்ற எடை மற்றும் உயரம் இருந்தால்தான் அது ஆரோக்கியமான குழந்தை. உங்கள் குழந்தையின் உயரமும் எடையும் சரியான விகிதத்தில்தான் இருக்கின்றனவா என்பதை எப்படி அறிந்துகொள்வது? 


குழந்தை பிறக்கும்போது 48 செ.மீ. முதல் 50 செ.மீ. வரை உயரமும்  மற்றும் 3.3 கிலோகிராம் எடையும் இருக்கும். பிரசவத்திற்குப் பிறகு  ஒரு சிசு பிறந்தபோது உள்ள 3.3 கிலோகிராம் எடையிலிருந்து பொதுவாக 5 முதல் 10 சதவிகிதம் இழக்கிறது. இரண்டு  வாரத்துக்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பது மட்டுமல்லாமல் வளர்ச்சியிலும் முன்னேற்றம் காட்டும்.


மூன்று மாதம் (6.0 கிலோகிராம்) முதல் ஆறு மாதம் (7.8 கிலோகிராம்) நிறைவுற்ற ஒரு சிசு பிறந்த கால எடையைப்போல இரு மடங்கு எடை வளர்ச்சி பெறவேண்டும். ஆறு மாதம் முதல் பன்னிரெண்டு மாதம் வரை சிசுவிடம் விரைவான வளர்ச்சி இருக்காது. ஒரு வயதிற்கும் இரண்டு வயதிற்கும் இடைப்பட்ட காலத்தில் குறுநடைப் பருவக் குழந்தை (10.2 - 12.3 கிலோகிராம்) வரை எடை வளர்ச்சி பெறவேண்டும். இரண்டு முதல் ஐந்து வயது வரை ஒவ்வொரு வருடத்திற்கும் முறையே (2.30 கிலோகிராம்) வரை  எடை வளர்ச்சி பெறவேண்டும். அதாவது இரண்டு வயதில் (12.3 கிலோகிராம்); மூன்று வயதில் (14.6 கிலோகிராம்); நான்கு வயதில் (16.7 கிலோகிராம்); ஐந்து வயதில் (18.7 கிலோகிராம்) வரை எடை வளர்ச்சி பெறவேண்டும்.


பொதுவாக இரண்டு வயது முதல் பத்து வயது குழந்தைகள் நிதானமான வேகத்தில் வளர்கிறார்கள். குமரப் பருவத்தில் மிக வேகமான எடை வளர்ச்சி தொடங்குகிறது. இது ஒன்பது வயது முதல் பதினைந்து வயது வரை நிகழ்கிறது.     

குழந்தையின் வளர்சியைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு உயரத்தை ஒரு அளவுகோலாகக் கொள்ளலாம். பிறந்தவுடன் குழந்தையின் உயரம் 50.5 செ.மீ. ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் குழந்தையின் உயரம் தோராயமாக 2.0 செ.மீ (அல்லது ஒவ்வொரு மூன்று மாதத்திலும் 5.0 செ.மீ) அதிகரிக்கிறது.   இந்த உயரம் முதல் வருடத்தில் 25 செ.மீ அதிகரிக்கும். தொடர்ந்து இரண்டாம் வருடத்தில் 12 செ.மீ அதிகரிக்கும்.  இதன் பிறகு குறைவான குழந்தை வேகத்திலேயே வளர்கிறது. குழந்தையின் 3 ஆம் 4ஆம் மற்றும் 5ஆம் வருடங்களில் முறையே 9 செ.மீ, 7செ.மீ மற்றும் 6 செ.மீ என்ற அளவில் மட்டுமே உடலின் உயரம் அதிகரிக்கிறது.  பிறந்த குழந்தையின் தலை சுற்றளவு 34 செ.மீ ஆக இருக்கும்.  6 முதல் 9 மாதம் கழித்து இந்த தலை சுற்றளவைவிட மார்பின் சுற்றளவு அதிகரிக்கும்.

குழந்தை பிறந்து முதல் இரண்டு வயது வரை உண்டான  வளர்ச்சியானது அதனுடைய மூளையின் வளர்ச்சி மற்றும் எதிர்கால வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் ஊட்டச்சத்து முக்கியமானது.

உயரம் மற்றும் எடை அட்டவணை
பல்வேறு வயதுகளில் ஆண் / பெண் குழந்தைகளின் சராசரி உயரம் மற்றும் எடை
 

 வயது
 ஆண்
 பெண்
வளர்ச்சி நிலைகள்
 எடை    உயரம்
(கி.கி)     (செ.மீ)
 எடை  உயரம்
(கி.கி)    (செ.மீ)
 பிறந்தநிலை
3.3
 50.5
3.2
49.9
சிசுப்  பருவம் (1 -12 மாதங்கள்). கை, கால்களில் அசைவு இருக்கும்.  24 மணி நேரத்தில் 22 மணி நேரம் உறங்கிக் கொண்டுதான் இருக்கும். பசிக்காகவும், உடல் உபாதைகளுக்காகவும் குழந்தைகள் அழும்.
 3 மாதம்
6.0
 61.1
5.4
60.2
சிசுப்  பருவம் (1 -12 மாதங்கள்). திடீரென ஒலி கேட்டால் குழந்தைகள் திரும்பிப் பார்க்கும். விளையாடுதல் சிறிது இருக்கும். அம்மாவின் முகமும், தொடு உணர்ச்சியும் புரியும்.
 6 மாதம்
 7.8
 67.8
7.2
 66.6
சிசுப்  பருவம் (1 -12 மாதங்கள்). குழந்தைகள் கவிழ்ந்து படுக்க ஆரம்பிக்கும். எதையும் பிடிக்காமல் உட்கார ஆரம்பிக்கும். தான் பார்க்கும் முகங்கள் யார் என்று புரிய ஆரம்பிக்கும்.
 9 மாதம்
 9.2
72.3
  8.6
 71.1
சிசுப்  பருவம் (1 -12 மாதங்கள்). எதையாவது பிடித்துக் கொண்டு நிற்க ஆரம்பிக்கும்.
 1 வருடம்
 10.2
76.1
 9.5
 75.0
குறுநடைப் பருவம் (1 -3 வருடம்). எந்த வித உதவியும் இல்லாமல் நடக்க ஆரம்பிக்கும். பொருட்களை கையால் எடுக்க ஆரம்பிக்கும். சிறிய வார்த்தைகள் பேச ஆரம்பிக்கும். குடும்ப மனிதர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியும்.
 2 வருடம்
12.3
 85.6
11.8
84.5
குறுநடைப் பருவம் (1 -3 வருடம்). மாடிப்படி ஏறுதல், ஓடுதல், காகிதத்தில் கோடுகள் வரைதல் போன்றவைகளைச் செய்ய ஆரம்பிக்கும்.
 3 வருடம்
14.6
 94.9
 14.1
93.9
முன் பள்ளிப் பருவம் (3 -6 வருடம்). வாக்கியங்கள் பேச ஆரம்பிக்கும். சிறிய பாடல்கள் பாட ஆரம்பிக்கும். மூன்று சக்கர வண்டி ஓட்ட ஆரம்பிக்கும்.
 4 வருடம்
16.7
 102.9
 16.0
 101.6
முன் பள்ளிப் பருவம் (3 -6 வருடம்). மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து கூட்டாக விளையாட்டு. சுயமாக டாய்லட் செல்லும் திறன்
 5 வருடம்
18.7
109.9
 17.7
 108.4
முன் பள்ளிப் பருவம் (3 -6 வருடம்). படித்தல், வரைதல் போன்றவை ஆரம்பிக்கும். சிறிய, சிறிய பாடல்கள் மனப்பாடமாக சொல்ல ஆரம்பிக்கும். பள்ளி செல்ல விரும்ப ஆரம்பிக்கும்.
 6 வருடம்
20.7
116.1
 19.5
 114.6
பள்ளிப் பருவம் (6 -10 வருடம் ) வீடு மற்றும் பள்ளிகளில் நடைமுறைகளைப் பின்பற்றும் திறன்.
 7 வருடம்
22.9
121.7
21.8
 120.6
பள்ளிப் பருவம் (6 -10 வருடம்). புரிதல் மற்றும் ஒழுங்குபடுத்தும் பண்பு
 8 வருடம்
25.3
127.0
 24.8
126.4
பள்ளிப் பருவம் (6 -10 வருடம்). சாதனங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்று ஆராயும் பண்பு
 9 வருடம்
28.1
132.2
 28.5
 132.2
பள்ளிப் பருவம் (6 -10 வருடம்). தகுதி ஆற்றலை ஆராயும் பண்பு
 10 வருடம்
31.4
 137.5
 32.5
 138.3
ஆரம்ப கால குமாரப் பருவம் (10 - 13 வருடம்). அபரிதமான உடல் வளர்ச்சி. இரண்டாம் நிலை பாலியல் பண்புகள்
 11 வருடம்
 32.2
140.0
 33.7
 142.0
ஆரம்ப கால குமாரப் பருவம் (10 - 14 வருடம்).
 12 வருடம்
 37.0
147.0
 38.7
 148.0
ஆரம்ப கால குமாரப் பருவம் (10 - 14 வருடம்).
 13 வருடம்
40.9
 153.0
44.0
 150.0
ஆரம்ப கால குமாரப் பருவம் (10 - 14 வருடம்).
 14 வருடம்
47.0
160.0
48.0
 155.0
இடைப்பட்ட குமாரப் பருவம் (14 - 16 வருடம்). சுதந்திரம் மற்றும் தனித்துவம்
 15 வருடம்
52.6
166.0
51.5
 161.0
இடைப்பட்ட குமாரப் பருவம் (14 - 16 வருடம்).  சகாக்கள் மற்றும் எதிர் பலினத்தவருடன் உறவுமுறை
 16 வருடம்
 58.0
 171.0
53.0
 162.0
இடைப்பட்ட குமாரப் பருவம் (14 - 16 வருடம்).
சாதித்து ஆய்தல்
 17 வருடம்
 62.7
175.0
 54.0
163.0
பிற்கால குமாரப் பருவம் (16 - 18 வருடம்).  வயது வந்தவர்.தனித்துவமான.அடையாளம். பூரண உடல் வளர்ச்சி
 18 வருடம்
65.0
 177.0
 54.4
164.0
பிற்கால குமாரப் பருவம் (16 - 18 வருடம்).  வயது வந்தவர். சுதந்திரமான எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள். பூரண உடல் வளர்ச்சி  
 
 (ஆதாரம்: ஊட்டச்சத்துத் தேவைகள் மற்றும் இந்தியர்களுக்குப்  பரிந்துரைக்கப்பட்ட உணவுத்திட்ட படித்தரம் ஐ.சி.எம்.ஆர் Source: Nutrient Requirements and Recommended Dietary Allowances for Indians, I.C.M.R. 1990.)

மேலே கொடுக்கப்பட்டுள்ள வளர்ச்சியின் அளவுகள் ஒவ்வொருவரின் எடை மற்றும் உயரத்துக்கும் ஓரளவு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம். பொதுவாக பெண் குழந்தைகளின் வளர்ச்சி விகிதம் சிறுவயதில் அதிகமாக இருக்கும். ஆண் குழந்தைகளின் வளர்ச்சியானது பெண் குழந்தைகளோடு ஒப்பிடும் பொழுது சிறுவயதில் குறைவாகவும், ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் அதிகரிக்கவும் ஆரம்பிக்கும். 

குழந்தையின் உணவுத் தேவை

உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தாய்ப்பால் மிக முக்கியமானது. பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம். ஆறு மாதம் கழித்து உங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து 3 முதல் 5 வேளை வரை  சரிவிகித ஊட்டச்சத்து உணவு தேவை. சரிவிகித ஊட்டச்சத்து உணவு என்பது கலோரி, புரோட்டின், கொழுப்புச் சத்து, வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் என்பனவாகும்.  உங்கள் குழந்தைக்கு சரிவிகித ஊட்டச்சத்து உணவு கொடுப்பதன் மூலம் முறையான வளர்ச்சி, அபிவிருத்தி, வயதுக்கேற்ற சரியான எடை எல்லாம் பெற முடியும்.  குழந்தைகள் உங்களைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறார்கள். எனவே சரியான உணவுப் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள். சில நேரங்களில் உண்ண விரும்பாமல் போகலாம் அல்லது தேவையற்ற நொறுக்குத் தீனிகளை நிறைய திண்ண விரும்பலாம். உணவு அளிக்கும்போது அவர்கள்  உண்ணாமல்  போகும்போது தண்டிக்கவோ அல்லது முறையாக உண்ணுவதற்காகப் பாராட்டிப் பரிசளிக்கவோ வேண்டாம். அப்படி இதுவரை செய்திருந்தால் படிப்படியாக தவிர்த்து விடுங்கள். அவர்கள் விரும்பி உணவு உண்ணுவதற்கு மாற்று வழிகளைக் கண்டறியுங்கள்  அவர்கள் மகிழ்வுடனும், நிம்மதியாகவும் உணவு உண்ணத் தகுந்த சூழலை அமைத்துக் கொடுங்கள்.

உங்கள் குழந்தைகள் துருதுருவென்று இருப்பார்கள். இவர்கள் பசியென்று சொல்லாமல் போனாலும் சரிவிகித ஊட்டச்சத்து உணவினை முறையான இடைவெளி அமைத்துக்கொண்டு கொடுக்கவேண்டும். இந்த உணவு சுமார் 150 மி.லி. அளவில் இருந்து 250 மி.லி. அளவில் இருக்கலாம். இந்தப் பழக்கம் அவர்கள்  வளரவும் விளையாடவும் தேவையான சக்தியை வழங்கும். உங்கள் சத்துணவு ஆலோசகர்கள் உங்கள் குழந்தையின் வயது மற்றும் உருவளவுக்கேற்ப (body size) உட்கொள்ளத் (intake) தேவையான கலோரி அளவினை கணக்கிட்டுச் சொல்லுவார்கள்.  உங்கள் குழந்தையின் வயது மற்றும் எடையின் (கி.கிராமில்) அடிப்படையிலேயே அவர்களுக்குத் தேவையான கலோரி மற்றும் ப்ரோட்டின் அளவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. உங்கள் குழந்தையின் எடை பவுண்டில் இருந்தால் அதை கிலோகிராமில் மாற்றுவதற்கு அந்த எடையை 2.2 என்ற எண்ணால் வகுக்கவேண்டும்.

கலோரி தேவைகள்

பிறப்பு முதல் மூன்று வயது வரை:  ஒவ்வொரு கிலோகிராமிற்கும் சுமார் 100 கலோரி
நான்கு வயது முதல் ஆறு வயது வரை: ஒவ்வொரு கிலோகிராமிற்கும் சுமார் 90 கலோரி   
ஏழு வயது முதல் பதினோரு வயது வரை: ஒவ்வொரு கிலோகிராமிற்கும் சுமார் 70 கலோரி   

புரோட்டின் தேவைகள்

பிறப்பு முதல் மூன்று வயது வரை:  ஒவ்வொரு கிலோகிராமிற்கும் 1.2 கிராம் 
நான்கு வயது முதல் ஆறு வயது வரை: ஒவ்வொரு கிலோகிராமிற்கும் 1.1 கிராம்
ஏழு வயது முதல் பதினோரு வயது வரை: ஒவ்வொரு கிலோகிராமிற்கும் 1.0 கிராம்

வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள்: சரிவிகித ஊட்டச்சத்து உணவு உண்ணும்போது கூடுதல் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் தேவையில்லை. உங்கள் சத்துணவு ஆலோசகரிடம் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் பற்றி ஆலோசனை பெறுவது அவசியம்.

ஒரு வயதில் உங்கள் குழந்தை தானே தன் கையில் எடுத்து உண்ணுதல் நல்ல பழக்கம். சில நேரங்களில் பராக்குப் பார்த்துக்கொண்டு உணவில் கவனம் செலுத்தாமல் போகலாம். இதை சரி  செய்வது எப்படி?    உணவு அமைப்பு, நிறம், வடிவம் மற்றும் சுவை போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி உணவைக் கவர்ச்சியாக மாற்ற வேண்டும்.

இரண்டு முதல் மூன்று வயதில் உங்கள் குழந்தை பலத்த விருப்பு வெறுப்புகளைக் காட்டலாம். இந்த நிலைமை வாராவாரம் மாறலாம். குழந்தைகளை நச்சரிப்பதால் அவர்களுக்கு உணவு மீது வெறுப்பு வருகிறது. அதனால் அவர்கள் குறைவாக சாப்பிடுகின்றனர். உடல் எடை மற்றும் வளர்ச்சிக் குறைபாடு இல்லாதவரை இது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. பல்வேறு வகையான உணவுகளை சமைத்துக் கொடுக்கலாம். தானியம், பருப்பு, காய்கறிகள், பழங்கள் என்று பல்வேறு உணவு வகைகளைக் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நான்கு முதல் ஆறு வயதுள்ள குழந்தைகள் உணவு உண்ண மிகுந்த நேரம் எடுத்துக் கொள்வார்கள். விளையாட்டு மற்றும் பொம்மைகள் இவர்களை உணவில் கவனம் செலுத்தவிடாமல் செய்வதுண்டு. குறிப்பிட்ட உணவு வகையினை உண்ணாமலிருந்தால் இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். சில வாரங்கள் கழித்து இந்த உணவு வகையினை திரும்பப் பரிமாறுங்கள். தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருப்பது நல்ல மாற்றம் தரும்.

ஏழு முதல் பதினோரு வயதுள்ள குழந்தைகள் அவர்கள் பசிக்கேற்ப உண்ணுவார்கள். இந்தப் பழக்கம் இவர்களது முறையான எடை மற்றும் சக்தி அளவினைப் பராமரிக்க உதவும். முறையான உணவுப் பழக்க வழக்கங்களைப் பாராட்டுங்கள். முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்களைத் தற்போது கண்டுகொள்ளாதீர்கள்.

உணவுக் குழு தேர்வு செய்யும் முறை (Food Group Choices)


இரண்டு வயது வரை முழமையான பால் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்த டெய்ரி பொருட்கள் எல்லாம் புகட்டினால் உங்கள் குழந்தையின் நரம்பு மண்டலத்தை வலுவாக்கும்.

இரண்டு வயதிற்குப் பிறகு நிறைவான கொழுப்பினைச் சமன் செய்ய (saturated fat intake) இரண்டு சதவிகிதம் பால் மற்றும் டெய்ரிப் பொருட்களை மட்டுமே உணவில் சேர்த்துக்கொள்ளுதல் நலம்.

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வைட்டமின் 'சி' நிறைந்த உணவினைத்  தரவேண்டும். கேரட், பீட்ரூட், குடைமிளகாய் போன்ற காய்கறிகளிலும் ஆரஞ்சு, சாத்துக்குடி, நெல்லிகாய், எலுமிச்சை, தக்காளி, பப்பாளி, முலாம்பழம், கொய்யா, அன்னாசிப்பழம் போன்ற பழவகைகளிலும் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது  . இது போல வைட்டமின் 'ஏ' நிறைந்த உணவினையும் தரவேண்டும். முட்டை மஞ்சள் கரு,  கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஸ்பினாச், மற்றும் சில கீரைகள், முட்டைகோஸ், பரங்கிக்காய், முருங்கைக்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்ற காய்கறிகளிலும் மாம்பழம், கேரட், ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி போன்ற பழவகைகளிலும் வைட்டமின் ஏ அதிகம் இருக்கிறது.

 

ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை மசித்த உணவையும் ஒரு வயதுக்கு மேல், கையால் பிசைந்த உணவையும் ஊட்டலாம்.  குழைய வெந்த அரிசி சாதம், பருப்பு, நன்கு வேகவைத்த காய்கறிகள், கிழங்குகள், பச்சைக்கீரைகள் மற்றும் சிறிதளவு நெய் கலந்து மசித்த / பிசைந்த   உணவு மிகவும் நல்லது. உங்கள் குழந்தை வளர்ந்து ஓடியாடி விளையாடும் வயதுக்கு வந்த பின்னால் சரிவிகித சமச்சீர் உணவு கொடுப்பது மிக மிக அவசியம். குழந்தையின் ஆதார அடிப்படை வளர்ச்சி என்பது நீங்கள் அளிக்கும் சரிவிகித உணவில் மட்டுமே  உள்ளது.  உங்கள் குழந்தைக்கு  தினசரி உணவில் என்னென்ன சத்துக்கள் தேவை?  கார்போஹைட்ரேட் - 65%, புரதம் - 25 முதல் 30%, நார்ச்சத்து 2 முதல் 3%  வைட்டமின்கள், தாது உப்புக்கள் மற்றும் இதர கனிமச் சத்துக்களும் சேர்த்துக்கொண்டால் அதுவே சரிவிகித வளர்ச்சியைத் தரும்.

குழந்தையின்  வளர்சிக்குப்  புரதம் இன்றியமையாதது. புரதம் பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, கொண்டைக்கடலை, பட்டாணி, வேர்க்கடலை, மொச்சை, முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகளிலும் இறைச்சியிலும் மிகுந்துள்ளது. பால் மட்டுமே தேவையான புரதத்தைத் தரவல்லதல்ல. சிறுதனியங்களான ராகி, கம்பு, திணை, சாமை, வரகு, போன்றவை நார்ச்சத்து மிகுந்த உணவாகும். சுக்குப்பொடி, ஏலக்காய் சேர்த்து சிறுதானியத்தில் செய்த பால் கஞ்சி மிகவும் நல்லது. தினமும் ஏதேனும் ஒரு பழத்தை உண்ணுமாறு பழக்குதல் நல்லது.


அடுத்து, உங்கள்  குழந்தையின் முறையான வளர்ச்சிக்கு சரிவிகித ஊட்டச்சத்து உணவு மட்டுமே போதுமானதா?  சரிவிகித ஊட்டச்சத்து உணவு தேவைதான் என்றாலும் நல்ல சூழலிலும் மனநிலையிலும் உங்கள் குழந்தை வளர்வது மிக அவசியமானது. நல்ல சூழலும் மனநிலையும் எவ்வாறு ஏற்படுத்துவது? இதற்கு என்னென்ன தேவை? விளையாட்டு  நல்ல சூழலையும் மனநிலையும் தரவல்லது. சரிவிகித ஊட்டச்சத்துணவைக் அளித்தாலும்  ஒரு குழந்தை போதிய வளர்ச்சியடையவில்லை என்றால் அதற்கு என்ன காரணம்? இதற்கு மரபியலும்  காரணமாக இருக்கலாம். பாசமும் மகிழ்ச்சியும் மிகுந்த உங்கள் குடும்ப  சூழலில், உங்கள் வளரும்போது அதன் வளர்ச்சிக்கு அத்யாவசியமான ஹார்மோன் சுரப்பிகள் தூண்டப்பட்டு குழந்தை நன்றாக வளரும். உங்கள் குழந்தையின் உடல் எடையை தேவைக்கேற்ப அதிகரிக்கவோ, குறைத்துக் கொள்ளவோ முடியும். உங்கள் குழந்தையின் உயரத்தை விருப்பம்போல் கூட்டவோ, குறைக்கவோ இயலாது. காரணம் உங்கள் குழந்தையின்  உயரம் பெரும்பாலும் உங்கள் குடும்ப மரபியலையொட்டியே அமைகிறது. என்றாலும், உங்கள் குழந்தையின் உயரத்தை ஓரளவு அதிகரிப்பதற்கு  சில உடற்பயிற்சிகள் உதவலாம்.

குழந்தைக்கு ஐந்து வயதுக்குள் குறிப்பிட்ட வளர்ச்சி அடையாமல் போனால், அதன் பிறகு அக்குழந்தையின் வளர்ச்சி விகிதத்தைக் அதிகரிப்பது என்பது மிக மிகக் கடினமாகும்.

குழந்தையின் உடல் வளர்ச்சி மட்டுமல்லாமல் மன வளர்ச்சி மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றின் வளர்ச்சியும் இன்றியமையாதது. இவற்றையும்  முறையாகக் கண்காணித்து வருவது மிகவும் அவசியமாகும். குழந்தையின் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, புத்திசாலித்தனம் மற்றும் நுண்ணறிவு வளர்ச்சியைக் அளவிட  சில விதிமுறைகள் (formulas) உள்ளன.  பெற்றோர் இந்த விதிமுறைகளைப் பயன்படுத்தி அளவிடும் கலையை  சுகாதார நலப் பணியாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

Saturday, July 25, 2015

உங்கள் குழந்தையைத் தெரிந்துகொள்ளுங்கள் - 5

நரம்பியல் அறிவியல் (Neuro science), உளவியல் (Psychology), கற்பிக்கும் கலை (pedagogy): காலவரிசை / மைல்கல் நிகழ்வுகள்


Source: Interpretation of Tokuhama-Espinosa’s transdisciplinary fieldby Nakagawa, (2008), redrawn by Bramwell 2010.

நமது மூளையைப் பற்றிய பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நமக்கு மிகுந்த ஆச்சர்யத்தைத் தருகின்றன. கிறிஸ்து பிறப்பிற்கு முன்பு கிரேக்க இலத்தீனிய தத்துவ ஞானிகள் பலவாறான யூகங்களை வெளிப்படுத்தினார்கள். கி.பி. ஆறு மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் மூளைபற்றிய ஆய்வுகள் மந்த கதியில் நடந்தன. பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஆய்வுகள் துரித கதியில் நிகழ்ந்தன. இருபதாம் நூற்றாண்டு நவீன மருத்துவம் கம்ப்யூட்டர் நுட்பங்களை உள்ளடக்கிய பலகருவிகளைப் பயன்படுத்தி வாழும் மூளையின் செயல்பாடுகள் கண்டறியப்பட்டன.    மேலை நாடுகளில் பல ஆராய்சி நிறுவனங்களில் , பல்கலைக்கழகங்களில், ஆய்வுத் திட்டங்களில்  நடைபெற்ற மூளை ஆராய்சியில் பல சிக்கலான கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளன.  இப்பதிவில் நமது மூளையைப்பற்றி கடந்த காலத்தில் மேற்கொண்ட சுவையான ஆய்வுகள் பற்றிக் காண்போமா?

Source: Tokuhama-Espinosa, 2010 based on Hideaki Koizumi (1999) and Boba Samuel’s (2009) concepts of transdisciplinary studies. Graphic by Bramwell (2009).
‘தேவையற்ற சதைப் பிண்டம்’ இது  Braegen ‘பிரேன்’ என்ற லத்தீன் சொல்லின் பொருள். உங்களுக்கு தெரிந்த ('brain') பிரைன் ஆங்கில வார்த்தையின் வேர்ச்சொல் பிரேன் என்ற லத்தீன் வார்த்தையாகும். லத்தீனியர்கள்  மூளையை தேவையற்ற சதைப்பிண்டம் என்று நம்பி வந்துள்ளனர். சீன மொழியில் கூட மூளை என்ற வார்தைக்கினையான சீனச்சொல் இல்லை.  

அரிஸ்டாட்டில்

கி.மு. 350 வரலாற்றுக்கு முந்திய காலத்தில்  கிரேக்க சிந்தனையாளர்கள் உயிர் மற்றும் ஆன்மா பற்றி நிறைய சிந்தித்தார்கள்.  கிரேக்க  தத்துவங்களின் அடிப்படையில் ஆன்மா உருவமற்ற ஒன்று என்றும் அது அழிவில்லாதது என்றும் விளக்கினார்கள். கிரேக்கர்கள் உயிருடன் இருப்பதை ஆன்மாவுடன் இருப்பதாக நம்பினார்கள். கி.மு. 350இல் அரிஸ்டாட்டில் ஆன்மாவின் இயல்புகள் (டி அனிமா) (Latin, De anima) என்ற தலைப்பில் உயிர் மற்றும் ஆன்மா பற்றி  ஒரு தனிப் புத்தகமே எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தை அரிஸ்டாட்டில் எவ்வாறு தொடங்குகிறார் தெரியுமா?  ”உலகில் இதுவரை கேட்கப் பட்ட கேள்விகளிலேயே மிகவும் கடினமானது உயிர்/ஆன்மா என்றால் என்ன என்ற கேள்விதான்” என்று தொடங்குகிறார். என்றாலும் உடல் இல்லாமல் ஆன்மாவால் இயங்க முடியும் என்று பிளாட்டோ தெரிவித்த கருத்தை அரிஸ்டாட்டில் ஏற்கவில்லை. எனவே உளவியலின் முதல் நூல் அரிஸ்டாட்டிலால் எழுதப்பட்ட De Anima  'ஆன்மாவின் இயல்பு' என்பதாகும்.    

மனித மூளை பற்றி முதன் முதலில் ஆராய்ந்தவர் அரிஸ்டாட்டில். அவர் மூளை பற்றி கூறுகையில் 'இதயம் செலுத்தும் இரத்தத்தை குளிர்விக்கும் வேலையையே மூளை செய்கிறது' என்று நம்பினார்.    

கி.பி. முதலாம் நூற்றாண்டு அலெக்சான்றியன், கி.பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த மருத்துவர், 'மனித எண்ணமானது இதயத்தை விட மூளையாலேயே கட்டுபடுத்தப்படுகிறது' என்று நம்பினார்

கேலன் (Galen) (120-200 AD)
மருத்துவ அறிஞர்களின் வரிசையில் முன்னணி இடம் வகித்த கேலன் (Galen) என்ற கிரேக்க அறிஞர் மருத்துவ அறிவியல், உடற்கூறியல் (anatomy) ஆகிய துறைகளில் அரும்பணியாற்றியவர். மனிதக் குரங்குகள் மற்றும் சில விலங்குகளைத் தமது ஆய்வுக்கு உடற்கூறியல் ஆய்வில் ஈடுபட்ட முதல் ஆய்வாளர்.இவர் 'எல்லா நரம்புகளும் மூளைக்குத் தண்டுவடம் (spinal cord) வழியே செய்திகளைத் தெரிவிக்கின்றன' என்றார். 

லியானார்டோ டாவின்சி
கிறித்துவமத வழக்கப்படி இறந்த உடலைத் தோண்டுவதும், அதுபற்றி ஆய்வதும் கொடூர குற்றம் ஆகும். அப்படி தடையை மீறி செய்தால் மரண தண்டனை என்ற நடைமுறை பதினாறாம் நூற்றாண்டில் மேலை நாடுகளில் கடைபிடிக்கப்பட்ட காலத்தில், எடின்பரோ நகரில் லியானார்டோ டாவின்சி (1452 – 1519 A.D.) மனித உடல் பற்றி மிகவும் ரகசியமாக ஆராய்ந்து வந்தார். மத நெருக்கடிகளால் இவர் தனது ஆராய்ச்சியை தொடர  இயலவில்லை.  இரு திருடர்கள் உதவியால் ஒரு பிணத்தைத் திருடி மண்டையோட்டின் உட்பகுதியை பிளந்து பார்த்தபோது அவரது இடப்புற மூளை அனைத்தும் சிதைந்து காணப்பட்டது. பிணத்தின் பெயர், முகவரி, அவர் எந்த வியாதிக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்ற தகவல்களை ஒப்பிட்டபோது அவருக்கு வலப்புறப் பக்கவாத நோய் இருந்ததைக் கண்டு டாவின்சி வியப்படைந்தார். உலகில் மனித மூளையின் செயல்பாடு குறித்து மேற்கொள்ளப்பட்டு  வெளியான முதல் ஆய்வு இது. தொடர்ந்து உடலின் இயக்கத்திற்கும், மூளைக்கும் பெரும் தொடர்பு உள்ளது கண்டு மேலை நாட்டு மருத்துவர்கள் மூளையின் செயல்பாடு பற்றிய முழு ஆராய்ச்சியில்  இறங்கினர்.

1536 நிக்கொல மாஸ்ஸா (Nicolo Massa) என்பவர் ஸெரிப்ரோ ஸ்பைனல் திரவம் (cerebro spinal fluid) பற்றி விவரித்தார்.

1543 அன்றியாஸ் வெஸலியஸ் (Andreas Vesalius) என்பவர் பினியல் சுரப்பி (pineal gland) பற்றி விளக்கினார்   

1573 கான்ஸ்டான்சோ வரோலியோ (Constanzo Varolio) என்பவர் போன்ஸ் (pons) என்னும் உறுப்புக்குப் பெயர் சூட்டினார். இவர் தான் மனித மூளையை முதன் முதலில் அதன் அடிப்பகுதியிலிருந்து வெட்டி எடுத்தவராவார்.

1586 ஏ பிக்கோலோமினி என்பவர் கார்டெக்ஸ் மற்றும் வொய்ட் மேட்டர் (வெள்ளை வஸ்து) ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டறிந்தார்.

1649 ரெனி டெஸ்கார்ட்டிஸ் (Rene Descartes)  என்பவர் பினால் சுரப்பி (pineal gland) உடல் மற்றும் உள்ளத்தின் கட்டுப்பாட்டு மையம் (control center) என்றார்  

1664 தாமஸ் வில்லிஸ், கிறிஸ்டோபர் ரென் படங்களுடன்,  ஸெரிப்ரி அனாட்டமி என்ற நூலை வெளியிட்டார். மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை விளக்கிய புத்தகம் இது.

1681 தாமஸ் வில்லிஸ் ந்யூராலாஜி (நரம்பியல்) என்ற சொல்லாக்கத்தை முதலில் பயன்படுத்தினார்

1749 டேவிட் ஹார்ட்லி (David Hartley) என்பவர் சைக்காலஜி (psychology) என்ற சொல்லாக்கத்தை தாம் எழுதிய Observations of Man என்ற ஆங்கில நூலில் முதலில் பயன்படுத்தினார்.

சைகாலஜி என்ற வார்த்தைக்கு சரியான மொழிபெயர்ப்பு என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? மனிதனின் ஆன்மா அல்லது ஆவியின் இயல்பு மற்றும் செயல்பாடுகள் பற்றி விளக்கும் அறிவியல் என்பதாகும். எனவே உளவியல் என்பது ஆன்மாவின் பண்புகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்யும் பிரிவாகவே முதலில் தோன்றியது.  ஆதிமனிதன் தன் உடலுக்குள் ஆன்மா என்னும் உருவமற்ற ஸ்தூலப்பொருள் இருப்பதாக நம்பினான். இந்த ஆன்மாதான் மனித உடலை இயக்குகின்றது என்ற முடிவில் திடமாயிருந்தான்.

1760 அர்னி சார்லஸ் லாரி (Arne-Charles Lorry) என்பவர் ஸெரிபெல்லதில் (cerebellum) ஏற்படும் சேதம் (damage) மோட்டார் (இயக்கும் சக்தி) ஒருங்கிணைப்பைப் (motor coordination) பாதிக்கும். என்பதை செயல்விளக்கம் செய்தார்.

1786 உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்றும் இது  மனது பற்றியது என்றும் கூறியவர் இம்மானுவேல் கான்ட் Immanuel Kant (1724-1804) என்ற ஜெர்மானிய தத்துவ மேதை ஆவார்.

1791 லூகி கால்வானி (1737 – 1798 A.D.) என்னும் இத்தாலிய விஞ்ஞானி போலக்னா பல்கலைக்கழகத்தில் தவளையைப்  பயன்படுத்தி சோதனைகளை மேற்கொண்டார். தவளையின் கால்களை கூறிய கத்தியால் வெட்டியபோது விலங்குகளின் நரம்புகளிலும் தசைகளிலும் மின்சார தூண்டல்கள் இருக்கிறது என்று கண்டார்.   

1808 பிரான்ஸ் ஜோசஃப் கால்  (1758 -1828 A.D.) என்ற ஜெர்மன் நரம்பு உடற்கூறியலாளர் மற்றும் அமைப்பியலாளார் (phrenologist) குறிப்பிட்ட மூளைப் பகுதிகள் குறிப்பிட்ட செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றன என்று கண்டறிந்தார். க்ரே மேட்டர் என்னும் சாம்பல் வஸ்து ந்யூரான்களாலும் வொய்ட் மேட்டர் என்னும் வெள்ளை வஸ்து நரம்பு இழைகள் என்னும் ஆக்ஸான்ககளாலும் அமைந்துள்ளன என்றும் கண்டறிந்தார்.

1844 ராபர்ட் ரிமார்க் என்பவர் ஆறடுக்கு கார்ட்டெக்ஸ் (6 layered cortex) பற்றி விளக்கம் கொடுத்தார்

1853 வில்லியம் பெஞ்சமின் கார்பெண்டர் (William Benjamin Carpenter) என்பவர் தலாமஸ் (thalamus) என்ற உணர்ச்சி மண்டல முடிச்சு (sensory ganglion) நனவு நிலையின் அமைவிடம் (seat of consciousness) என்று விளக்கினார்.

1861 பால் ப்ரோகா (Paul Broca) (1824 – 1880) என்ற பிரெஞ்சு மருத்துவர் மனிதனின்முன் மூளையின் இடது பக்க மடல் (left frontal lobe) மொழி மேம்பாட்டில் ( language development) மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று கண்டறிந்தார்.

1874 கார்ல் வெர்நிக்கி (Carl Wernicke) (1848 – 1905)) என்ற ஜெர்மானிய மருத்துவர் மனிதனின்முன் மூளையில் (frontal lobe) குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் சேதம் (damage) மொழியினைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் பேசும் திறன்களைப் பாதிக்கிறது என்று விவரித்தார்.

1879 வில்ஹெம் ஊண்ட் (Wilhelm Wundt) (1832-1920) என்ற ஜெர்மானிய உளவியல் அறிஞர் தத்துவம் (philosophy), உடற்கூறியலிலிருந்து (biology) உளவியலை (psychology) தனியே பிரித்து அதன் கோட்பாடுகளை (theories) சிறப்பாக நிறுவினார். கட்டமைப்பியல் (Structuralism or the analysis of the basic elements that constitute the mind) குறித்த இவருடைய முதல் கோட்பாடு சிறப்புடையது. நடத்தையியலில் (behaviorism)) பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இவைதான் இன்றளவும் உளவியல் மருத்துவ சிகிச்சையில் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஜெர்மனியில் முதல் உளவியல் பரிசோதனைக் கூடத்தை (first formal laboratory of Psychology) நிறுவியவரும் இவரே. இவர் சோதனை உளவியலின் தந்தை ("father of experimental psychology") என்று போற்றப்படுகிறார். 

1891 பேராசிரியர் வில்ஹெம் ஃவான் வால்டேயர் ஹார்ட்ஸ் (1836 – 1921 A.D.) என்னும் உடற்கூறியல் மற்றும் திசுவியலாளர் குரோமோசோம் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தினார்.  ந்யூரான் என்ற வார்த்தையும் முதன்முதலில் இவரால் பயன்படுத்தப்பட்டது.

1896 - 1900 உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே (உள்மனம்) (unconscious mind) எனக் கூறியவர் - சிக்மண்ட் பிராய்டு (Sigmund Freud - 1856 – 1939) என்ற ஆஸ்திரிய உளநோய் மருத்துவர்.  சிக்மன்ட் பிராய்டின் முக்கிய கண்டுபிடிப்பு 'இயக்க உளவியல்' ( Dynamic Psychology) ஆகும். உளப்பகுப்புக் கொள்கை என்பது நனவற்ற மனதில் ஒரு மனிதனால் அறிய இயலாத பல மனவெழுச்சிகளும், எண்ணங்களும்,  சிக்கல்களும், நோக்கங்களுமே உள்ளன. இந்த உணர்வுகள், முன்னால் நனவு மனநிலையிலிருந்து பின்பு நனவிலி மனதுக்குள் நசுக்கப்பட்டவையாகும். நனவிலி மனத்துள்ளே காணப்படும் ஊக்கிகளை சிக்மண்ட் ப்ராய்ட்  பாலுணர்ச்சியுடன்  தொடர்புபடுத்தியுள்ளார்.

1897 இவான் பெட்ரோவிக் பாவ்லவ் - - Ivan Petrovich Pavlov (1849 - 1936) என்ற ருஷ்ய உளவியல் அறிஞர் 'சிறப்பு ஒருமைப்படுத்துதல்' (classical conditioning), 'ஊக்கப்படுத்துதல்' (transmarginal inhibition). 'நடத்தை மாறுபாடுகளை சரி செய்தல்' (behavior modification) போன்ற கொள்கைகளை வகுத்தமைக்காகப் போற்றப்படுகிறார்.  1904 ஆண்டில் மருத்துவத்திற்கான நோபல் பரிசினை இவர் பெற்றார்.

1897 சார்லஸ் ஷெரிங்க்டன் (1857 – 1952) என்னும் ஆங்கிலேய மருத்துவர் 'ந்யூரானின் செயல்பாடுகளைக்' கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றார். ந்யூரான் மற்றும் சிநாப்ஸ் என்ற சொற்களை முதன்முதலில் பயன்படுத்தினார்.

1906 அலாய்ஸ் அல்ஸீமியர் (1864 – 1915) என்னும் ஜெர்மானிய உளவியல் மற்றும் நரம்பு நோயியல் மருத்துவர்  டிமென்ஷியா என்னும் முதுமை மறதி நோயின் நோய்குறியாய்வு நிலைகளைக் (pathological conditions) கண்டறிந்தார். இந்த நோய் இவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

1910 முழுமைக்காட்சிக் கோட்பாடு ('whole form' approach) அல்லது கெஸ்டால்ட்  கொள்கை. கேஸ்டால்ட் என்பது  ஒரு ஜெர்மன் சொல் (Berlin School of experimental psychology) உளவியல் அறிஞர் பெயர் அல்ல. மனித நடத்தையின் உண்மை இயல்புகளை அறிய வேண்டுமாயின் , அதனைச் சிறு சிறு  கூறுகளாகப் பகுத்து ஆராயாமல், அந்த நடத்தையை  முழுமையாக உற்று நோக்கி ஆய்வு செய்யும் முறையே  முழுமைக்காட்சிக் கோட்பாடு ஆகும்.

1910 மாக்ஸ் வெர்தீமியர் (Max Wertheimer) (1880 - 1943) செக்கொலோவாக்கிய உளவியலறிஞர். பிராங்க்பர்ட்டில் வுல்ப்காங் கோலார் (Wolfgang Kohler) மற்றும் குர்ட் கோப்க்கா (Kurt Koffka) ஆகியோருடன் இணைந்து கெஸ்டால்ட் என்ற கொள்கையை நிறுவினார்.

1913 உளவியல் என்பது மன அறிவியல் (Science of Mind) அல்ல என்றும் இது "நனவு நிலை" (consciousness) பற்றியது என்றும்  வலியுறுத்தியவர் அமெரிக்க உளவியல் ஞானியும் நடத்தையியல் துறையின்  (psychological school of behaviorism)  பிதாமகருமான ஜான் பி. வாட்சன்  (John  Broadus. Watson)      (1878 – 1958) ஆவார். "உளவியல்: ஒரு நடத்தையியலாளரின் பார்வை," ("Psychology as the Behaviorist Views It"- sometimes called "The Behaviorist Manifesto") என்ற கட்டுரையை 1913இல் வெளியிட்டார். மனிதனது வெளிப்படையான, புறத்திலிருந்து பிறரால் பார்த்து ஆராயக்கூடிய நடத்தைக் கோலங்களே நடத்தைக் கொள்கையின் அடிப்படை. மனித நடத்தையின் அடிப்படையாய் அமைவன மறிவினை போன்ற இயற்கையான தூண்டல் - துலங்கல் தொடர்புகள் தான். நாளடைவில் இத்தொடர்புகள்  கற்றல்   காரணமாக பல்வேறு சிக்கலான மாறுதல்களையடைந்து முதிர்ச்சி பெற்ற மனிதனிடம் காணப்படும் பலதரப்பட்ட நடத்தைக் கோலங்களாகப்  பரிணமிக்கின்றன. 'மனம்,' 'உள்ளம்,' 'நனவு நிலை' போன்ற பரிசோதனைக்கு உட்படுத்த இயலாத உளவியல் கொள்கைகளில் நடத்தைக் கொள்கையினருக்கு நம்பிக்கையில்லை.

1913 கார்ல் குஸ்டாவ் யுங் (1875 - 1961) என்ற சுவிஸ் உளவியல் நிபுணர் மற்றும் மனநல மருத்துவர்.பகுப்பாய்வு உளவியலை (analytic psychology) நிறுவினார். இவர் அயல்வய நோக்கினர் (extravert) மற்றும் அகமுக நோக்கினர் (introvert) போன்ற ஆளுமைத் தன்மைகளையும், மூலப்பிரதி (archetypes), கூட்டு மயக்கம் (collective unconsciousness) போன்ற கொள்கைகளையும்  முன்மொழிந்தது மட்டுமின்றி பேணிக் காக்கவும் செய்தார்.   

1932 உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் - வில்லியம் மக்டூகல் (William McDougall) (1871 – 1938).  மனிதனின் செயல்கள் அனைத்தும் ஒரு இலக்கினை நோக்கிச் செயல்படுகிறது என்று கூறும் கொள்கை - ஹார்மிக் உளவியல் கொள்கை. (Hormic psychology). 

1932 ஜீன் பியாஜெட்  (Jean Piaget 1896-1980) என்ற ஸ்விஸ் நாட்டு உளவியல் நிபுணர் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியானது பல நிலைகளில் நிகழ்கிறது என்று கருதினார். படிப்படியான இந்த வளர்ச்சி நிலைகளையும் அதற்கேயுரித்தான நடத்தை மாற்றங்களையும் குறிப்பிட்ட   நான்கு  நிலைகளாக்கி தந்திருக்கிறார்:
 
1. புலன் இயக்க நிலை (Sensory motor stage) (பிறப்பு முதல் 24 மாதம் வரை)
2. செயலுக்கு முற்பட்டநிலை (Pre-operational stage) (2 வருடம் முதல் 7 வருடம் வரை)
3. புலனீடான செயல் நிலை (Concrete operational stage) (7 வருடம் முதல் 12 வருடம் வரை)
4. முறையான செயல் நிலை (Formal operational stage) (12 வருடம் முதல் 18 வருடம் வரை)

பியாஜெட்டின் இந்தப் பாகுபாடு குழந்தையின் அறிதிறன் வளர்ச்சி மற்றும் புறச்சூழல் ஆகியவற்றை மட்டும்தான் தீவிரமாக கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

1947 மார்க் ரோஸன்வ்ச் (Mark R. Rosenzweig) (1922 – 2009) என்ற பெர்க்லி நகரைச் சேர்ந்த விஞ்ஞானி ஏணிகள், சக்கரங்கள் போன்ற பொம்மைகளை எலிகளின் சுற்றுப்புறத்தில் வைத்து அறுபதுகளில் ஆராய்ந்த போது  இவற்றின் மூளையில் ஏற்பட்ட பற்பல மாற்றங்களைக் கண்டறிந்தார்.   நல்ல சுற்றுப்புறத்தில் வாழும் எலிகள் நல்ல மூளை வளர்ச்சி அடைந்ததை சாதாரண சுற்றுப்புறத்தில் வளர்ந்த எலிகளுடன் ஒப்பிட்டு நிறுவினார்.
 
1948 பி.எஃப்.ஸ்கின்னர் என்கிற அமெரிக்க நடத்தையியல் உளவியல் வல்லுநர் 1948ஆம் ஆண்டு நடத்திய வரலாற்றுப் புகழ் மிக்க ஆய்வின் மூலம் புறாக்களுக்கு மூடப்பழக்கங்கள் இருப்பதாகக் காட்டினார்.
 
1949 டொனால்ட் ஹெப் (1904 – 1985) என்ற கனடாவின் உளவியலாளர் உள்ளம் (mind) மற்றும் மூளையைத் (brain) தொடர்புபடுத்தி கல்வி முறைமைகளை (educational methods) ஆராய்ந்தார். ஹெப்பியன் கற்றல் விதிகள் (Hebbian synapse), ஹெப்பியன் சினாப்ஸ் போன்றவை இவர் பெயரால் பிரபலம் அடைந்தன.

1950 எரிக் எரிக்சன் (Erik Erikson) (1902-1994) என்ற ஜெர்மனி உளவியல் அறிஞர் (developmental psychologist) உளவியல் மேம்பாட்டின் பல்வேறு நிலைகள் (theory on psycho-social development of human beings) குறித்த ஆய்வினை மேற்கொண்டார். இனம் காணலில் உள்ள பிரச்சினை குறித்து ஆய்வினை மேற்கொண்டார்.

1954 ஆப்ரஹாம் மாஸ்லோ (Abraham Maslow) (1908 – 1970) என்ற அமெரிக்க உளவியலாளர் தேவை படியமைப்பு கோட்பாடு (Maslow's hierarchy of needs) என்னும் ஐந்து படிகள் கொண்ட உளவியல் சார் கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார்.  தனது கொள்கையை ஒரு பிரமிட் படமாக மாஸ்லோ வரைந்தார்.

1957 ப்ரெண்டா மில்னர் கனடாவின் நரம்பியல் உளவியலாளர். இவருடைய ஹெச்.எம் என்ற நோயாளி ஒரு அறுவை சிகிச்சைக்குப் பின் குறுகிய கால நினைவாற்றலை நீண்ட கால நினைவாற்றலாக மாற்றுவதற்குச் சிரமப்பட்டாராம். இவர் இது பற்றி மேற்கொண்ட ஆய்வில் மனித மூளை பல நினைவாக அமைப்புகளைக் கொண்டுள்ளது என்றும் இவை மோட்டார் திறன் மற்றும் மொழி போன்ற பலதரப்பட்ட செயல்பாடுகளைக் கண்காணிக்கின்றன என்பதை செயல்விளக்கம் மூலம் நிறுவினார்.

1970s பாசிட்றான் எமிசன் டோமோக்ராஃபி (Positron Emision Tomography (PET) மூளையின் செயல்பாடுகளைப் படம்வரையும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

1983 ஹோவர்டு கார்ட்னர்  என்னும் அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் மேம்பாட்டு உளவிலாளர் மற்றும் கல்வியாளர் தான் 1983ல் எழுதிய, 'பிரேம்ஸ் ஆப் மைண்ட்: தி தியரி ஆப் மல்டிபிள் இன்டெலிஜென்சஸ்' என்ற புத்தகத்தில், மனிதனின் அறிவு ஏழு வகையானது என்ற கொள்கையை  முன்வைத்தார். பின்னர், அவரே அதை மேலும் மேலும் பிரித்து ஆராய்ந்து இறுதியாக வந்த, 'பிரேம்ஸ் ஆப் மைண்ட்' பதிப்பில், ஒன்பது வகை அறிவுகள் இருப்பதாக வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.  'இந்த ஒன்பது வகை அறிவுகள், திறன்கள், எல்லா மனிதர்களுக்குள்ளும் உண்டு. சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கலாம். எனவே ஒருவருக்கு இன்னது தான் வரும்; இன்னது வராது என்று கட்டம் கட்டுவதற்காக, யாரும் தன் வரையறையை பயன்படுத்தக் கூடாது' என்பது தான் வைத்த வேண்டுகோள்.

1986 ஆர்.பி என்னும் நோயாளி மூலம் மனித நினைவகத்துக்கு (human memory) ஹிப்போகாம்பாஸின் (Hippocampus) முக்கியத்துவம் நிறுவப்பட்டது.

1990 செகி ஒகாவா மற்றும் சகாக்கள் மேக்னடிக் ரெசோனன்ஸ் இமேஜிங் (காந்த ஒத்ததிர்வு படமெடுத்தல்) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார்கள்.

Reference:

  1. Why Mind, Brain, and Education Science is the "New" Brain-Based Education. Tracey Tokuhama-Espinosa. In John Hopkins School of Education. 
Related Posts Plugin for WordPress, Blogger...