Wednesday, May 20, 2015

மாமல்லபுரம் அதிரணசண்ட குடைவரைக் கோவில்: மேல்நாட்டு ஆய்வாளர் குறிப்பிடும் மூன்று கல்வெட்டுக்கள்

மாமல்லபுரத்தில் அமைந்துள்ள குடைவரைக் கோவில்களையும் ஒற்றைக்கல் இரதங்களையும் கட்டுமானக் கோயில்களையும் கட்டியவர் யார்? மாமல்லபுரம்  குடைவரைகள் முதலாம் மகேந்திரவர்மன் காலத்திற்குப் பிந்தியவை என்பது உறுதி. மாமல்லபுரத்திலுள்ள ஒற்றைக்கல் (பஞ்சபாண்டவ) இரதங்களை மகன் முதலாம் நரசிம்மவர்மன் (590-630 AD) என்னும் மாமல்லன் கட்டியதாக சில அறிஞர்கள் கூறி வந்தார்கள். பிற குடைவரைக் கோவில்களையும், வேறு சில ஒற்றைக்கல் இரதங்களையும்  முதலாம் நரசிம்மவர்மனுடைய பேரன் முதலாம் பரமேஸ்வரவர்மனும் (672-700 AD), அவனுடைய மகன் இரண்டாம் நரசிம்மவர்மன் (700-728 AD) என்னும் ராஜசிம்மனும் கட்டியதாகவும் பல அறிஞர்கள் கருதுகிறார்கள். குறிப்பாகக்   கணேச இரதம், கடற்கரைக் கோயில் ஆகிய கட்டுமானக் கோயில்கள் இராஜசிம்ஹனால் கட்டப்பட்டுள்ளது என்பது பற்றி ஒருமித்த கருத்து உள்ளது . ஆனால் தொல்லியல் அறிஞர் டாக்டர் ஆர்.நாகசாமியோ, மாமல்லபுரத்திலுள்ள குடைவரைகள்  ஒற்றைக்கல் இரதங்கள் கட்டுமானக் கோயில்கள் ஆகிய எல்லாமே இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் இராஜசிம்ஹனாலேயே கட்டப்பட்டவை என்கிறார். இது பற்றி 1962 ஆம் ஆண்டிலேயே R. Nagaswamy. Mahabalipuram: (Monumental Legacy). OUP India Monumental Legacy Series. 978-0-19-807127-3 108 pages என்ற ஆய்வுக்கட்டுரை பல விவாதங்களை எழுப்பியது.  

சில வாரங்களாகவே அறிஞர் ஆர்.நாகசாமி அவர்களின் கருத்துக்கு வலுவூட்டும் விதமாக ஒரு செய்தி வலைத்தளங்கள், முகநூல் பக்கங்கள், மின்னஞ்சல், செய்தித் தாள்களில் எல்லாம் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அது பற்றி விரிவாக விளக்கவே இந்த போஸ்ட் பதிவிடப்படுகிறது. 

மாமல்லபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள  சாளுவன்குப்பத்தில் புலிக்குகை (யாளி மண்டபம் என்று அழைப்பது தான் படுகிறது) மற்றும் அதிரணசண்ட பல்லவேஸ்வர மண்டபம் என்ற இரண்டு பல்லவ வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. அதிரணசண்ட பல்லவேஸ்வர க்ருஹம் என்ற இக்குடைவரை இராஜசிம்ஹனின்  விருதுப் பெயரான அதிரணசண்ட (அதி - மிகை , ரண - போர்களம், சண்ட - வல்லவன்) என்ற பெயருடன் தொடர்புடையது.

மூன்றடுக்குத் தரையமைப்புடன் கூடிய அதிரணசண்ட பல்லவேஸ்வரம் மண்டபம் முகப்பு, மண்டபம் மற்றும் கருவறை என்று பிரித்து அமைக்கப்பட்டுள்ளது. முகப்பில், சதுரம், கட்டு, சதுரம் என்று அமைந்த இரண்டு முழுத்  தூண்களையும், இரண்டு அறைதூண்களையும், வளைமுக போதிகைகளையும், உத்திரம், வாஜனம், வாலபி, கபோதம், பூமிதேசம் போன்ற பிரஸ்தார உறுப்புகளையும் பெற்றுள்ளது. கபோதத்திற்கு மேலே  சிறு சிறு குழிகள் பந்தல் போடுவதற்காக வெட்டப்பட்டுள்ளன போல் தெரிகிறது. கருவறையின்  நடுவில்  அமைத்த குழியில் (socket) 16 பட்டைகளுடன் அமைத்த இலிங்கமொன்று பொருதப்பட்டுள்ளது.   கருவறைப் பின் சுவற்றில் சோமாஸ்கந்தர் சிற்பத்தொகுதி புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது  கருவறையின் வாயில் முன்பு  இரண்டு துவாரபாலகர்களின் சிற்பங்கள் பக்கத்திற்கொன்றாகக்  காணப்படுகின்றன. அதிரணசண்ட பல்லவேஸ்வர க்ருஹத்தில் நுழைவாயிலின்  முகப்பிலிருந்து அரைத்தூண்களையொட்டி வெளிப்புறம் நோக்கி சரியும் மண்டபத்தின் இடது மற்றும் வலது புற பக்கச்  சுவர்களில் இரண்டு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இடது புறம் 16 வரிகளுடனும் 6 செய்யுட்களுடனும் கூடிய நாகரிக் கல்வெட்டும் வலப்புறம் 17 வரிகளுடனும் 7 செய்யுட்களுடனும் கூடிய பல்லவ கிரந்தக் கல்வெட்டும் அமைந்துள்ளன.


இக்கல்வெட்டுக்களில் காணப்படுவது சிறு சிறு வேறுபாடுகளுடன் கூடிய ஒரே சம்ஸ்கிருத சுலோகமாகும்.  ஆனால் இரண்டு வெவ்வேறு வரி வடிவங்களில் (எழுத்துகளில்) பொறிக்கப்பட்டுள்ளது. பல்லவ கிரந்தக் கல்வெட்டில்  இடம்பெறும் 7 செய்யுள்களுள் முதலிரண்டு செய்யுள்கள் அப்படியே மாமல்லபுரம் தர்மராஜ மண்டபத்திலும், கணேச இரதத்திலும்  அமைந்துள்ள கல்வெட்டுக்களில் முறையே 8 மற்றும் 9 ஆம்  செய்யுள்களாகவும், நான்காம் செய்யுள் அதே வரிசையில் நான்காம் செய்யுளாகவும் இடம்பெறுகின்றன.   பல்லவ மன்னன் இராஜசிம்ஹன் ஐந்தாம் செய்யுளில் ஐந்தாம் செய்யுளில்:

 'இப்பூவுலகை ஆள்பவர்களின் தலைவராகிய அதிரணசண்ட (Athiranchandah), இக்கோவிலை அதிரணசண்டேஸ்வரருக்கு (Athiranachandeshvara)  கட்டுவித்தார். இங்கு பசுபதி (Pashupathi) மலைமகளான (GiriTanaya) பார்வதியுடனும், குகனாகிய ஸ்கந்தனுடனும் (Skanda) (முருகன்),  கணங்கள் (gana) சூழ தங்கி மகிழ்வாராக. இதன் சமஸ்கிருதப் பகுதி திரு.ஆர். கோபுவின் Athiranchanda Surprise - Babington's Gift ப்ளாக் போஸ்ட்டிலிருந்து அப்படியே தரப்பட்டுள்ளது:

अतिरणचण्ड पतिरवनिभुजाम् अतिरणचण्डेश्वरम् इदं अकरोत् ।
इह गिरितनया गुहगणसहितो नियतकृतरति भवतुपशुपतिः ॥
AthiranchandaH pathiravanibhujaam AthiranchandEshvaram idam akarOt
Iha giritanaya guha gaNa sahitOH niyatakRtarati bhavatu pashupatiH

இக்கல்வெட்டுச் செய்யுள்களில் இராஜசிம்ஹன், 'அத்யந்தகாம' (Atyantakama), 'ஸ்ரீநிதி' (Srinidhi), 'ஸ்ரீபரா' (Sribhara), 'காமராஜா' (Kamaraja), 'தனஞ்சய' (Dhananjaya) மற்றும் 'சங்க்ரம்தீர' (Samgram-dhira) போன்ற விருதுப் பெயர்களால் (பிருடா) குறிக்கப்படுகின்றான்.  இவ்விருதுப் பெயர்களில் அத்யந்தகாம  என்ற விருதுப்பெயர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அத்யந்தகாம என்றால் 'முடிவில்லாத மன எழுச்சி உடையவன்'' என்று பொருள். காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள காஞ்சி கைலாசநாதர் கோவில் என்ற 'இராஜசிம்மேசுவரத்தில் இராசிம்மரின் பிறப்பைப்பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு "உக்ரதண்டனிடமிருந்து கடமை உணர்வு மிக்க ஸ்ரீஅத்யந்தகாமன் பிறந்தார்" என்று உள்ளது. இதிலிருந்து இராஜசிம்ஹர் தம் பெயரை அத்யந்தகாமன் என்றே அறிவித்திருப்பது புலனாகிறது. மேலும் மாமல்லபுரத்தின்  அத்யந்தகாம பல்லவேசுவர க்ருஹத்திலும் "ரணஜயன் என்ற பெயரால் புகழடைந்தவரான அரசர் அத்யந்தகாமன் இந்த சிவன் கோயிலைச் செய்வித்தார்" என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதிலிருந்து இராஜசிம்மர் அத்யந்தகாமன் மற்றும் ரணஜயன் ஆகிய இரு முக்கிய விருதுப் பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டதை நாம் அறிந்துகொள்ளலாம்.'

இந்த இரண்டு  சமஸ்கிருத கல்வெட்டுகள் தவிர மூன்றாவதாக ஒரு கல்வெட்டு இருந்ததாகவும், அது பற்றிய செய்தி கேப்டன் எம்.டபிள்யூ. கார் தொகுத்த ஒரு புத்தகமான "Seven Pagodas of the Coromandel Coast" இல் திரு. பெஞ்சமின் கை பாபிங்க்டன் (Benjamin Guy Babington) என்ற அறிஞர் 1828 இல் எழுதிய ஆய்வுக்கட்டுரையில் (An Account of the Sculptures and Inscriptions at Mahamalaipur; illustrated by Plates. By Benjamin Guy Babington, M.B, F.R.S, Sec. R.A.S) காணப்படுகிறது என்கிறார் திரு.ஆர்.கோபு.   சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலையில் டி.பி.ஐ வளாகத்தில் அமைந்துள்ள மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி (Madras Literary Society (1812) Library) நடத்தி வரும் பழம்பெரும் நூலகத்தில்  அளவில் பெரிய இந்த நூல் லாமினேட் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

நன்றி: திரு. பத்ரி சேஷாத்ரி
தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் உறுப்பினர்களான திரு.ஆர். கோபு, பேராசிரியர்  சுவாமிநாதன்,  திரு. பத்ரி சேஷாத்ரி மற்றும் திரு. சிவசுப்பிரமனியன் ஆகியோர் மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி நூலகத்தில் குறிப்பிட்ட புத்தகத்தைப் புரட்டிப் படித்த பொழுது சம்ஸ்கிருத சுலோகங்கள் மூன்று வரி வடிவங்களில் புகைப்படங்களாக பாபிங்டனின் கட்டுரையில் இணைக்கப் பட்டிருந்ததை பார்த்து அடையாளம் கண்டு கொண்டார்கள் (identified).

பாபிங்க்டன் பக்கம். நன்றி: திரு.ஆர். கோபு
முதலாவது - பல்லவ கிரந்தம். இரண்டாவது - நாகரி
மூன்றாவது - நாகரி - எங்கே ?
நன்றி திரு.பத்ரி சேஷாத்ரி 

குறிப்பிட்ட கட்டுரையில் திரு. பாபிங்டன் மாமல்லபுரத்திலுள்ள கணேச ரதம் மற்றும் தர்மராஜ மண்டபம் ஆகிய இரண்டு வரலாற்றுச் சின்னங்களில் இடம் பெற்றுள்ள மேற்கண்ட நான்கு, எட்டு மற்றும் ஒன்பதாம் வரிசையில் அமைந்த சமஸ்கிருதச் செய்யுள்களை சிலருடைய உதவியால் படித்துவிட்டு விரிவாக எழுதியுள்ளார். தொடர்ந்து திரு. டி ஹாவில்லாண்ட் என்ற மற்றொரு அறிஞர் மாமல்லபுரத்துக்கு வடக்கே அமைந்துள்ள குடைவரைக் கோவிலில் தான் கண்ட  மூன்று வரிவடிவங்களில் வேறுபட்ட சமஸ்கிருத செய்யுள் கல்வெட்டுக்களின் புகைப்படங்களை இணைத்து திரு. பாபிங்டனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். மேலே குறிப்பிட்ட கட்டுரை 1828 இல்  அறிஞர்கள் மத்தியில் திரு. பாபிங்டனால் படித்து விவாதிக்கப்பட்டு, ராயல் ஏஷியாடிக் சொசைட்டி ஆராய்ச்சி இதழில் 1830 வெளிவந்துள்ளது. திரு. டி ஹாவில்லாண்ட்டின் புகைப்படங்கள் இக்கட்டுரையில் இணைக்கப்பட்டிருந்தனவாம். இக்கட்டுரை அட்சரம் பிசகாமல் கேப்டன் எம்.டபிள்யூ. கார்  தொகுத்த புத்தகத்தில் இடம்பெற்று 1869 இல் வெளியிடப்பட்டுள்ளது. இக்கட்டுரையைத்தான் திரு. ஆர். கோபு  எம்.எல்.எஸ் நூலகத்தில் அடையாளம் கண்டுகொண்டார்.

பாபிங்டனின் 1828 ஆண்டு கட்டுரைக்குப் பின்பு  மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட பல அறிஞர்களும் ஒருமித்து  அதிரணசண்ட மண்டபத்தில் தாங்கள் பார்த்த இரண்டு கல்வெட்டுகளைப் பற்றி மட்டுமே எழுதியுள்ளார்கள்.  தற்போது இங்கு   பல்லவ கிரந்தம் மற்றும் நாகரி வரி வடிவங்களில் அமைந்த இரண்டு கல்வெட்டுக்களை  மட்டுமே நாம் காண முடிகிறது. திரு. டி ஹாவில்லாண்ட்டும் திரு. பாபிங்டனும் குறிப்பிடும் சற்று மாறுபட்ட நாகரி வரி வடிவில் அமைந்த அந்த மூன்றாவது எங்கே?இது திரு. ஆர். கோபு  எழுப்பிய கேள்வி.

கேப்டன் எம்.டபிள்யூ. கார்  தொகுத்த புத்தகத்தில் கர்னல் காலின் மெக்கன்ஸி (Colonel Colin Mackenzie) (1754 - 1821), (ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரி. இந்திய  கிழக்கிந்திய கம்பெனியில்  முதன்மைப் பிரதம நில அளவை (Surveyor General of India) ஆய்வாளராகப் பதவி வகித்தவர் மற்றும் கீழ்த்திசை சுவடித் தொகுப்பில் ஈடுபாடுடையவர்   மற்றும்  ஆவணவியல் அறிஞர்)   தொகுத்த மாமல்லபுர வரைபடம் ஒன்றும் காரின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மெக்கன்ஸியின் வரைபடம் அதிரணசண்ட மண்டபத்தில் மூன்று இடங்களில் கல்வெட்டுகள் இருப்பதை  மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது . தற்போது காணப்படும் இரண்டு கல்வெட்டுக்களும் வரைபடத்தில் சுட்டிக்கட்டப்படுகின்றன இது தவிர மூன்றாவதாக பேசப்படும் கல்வெட்டு அதிரணசண்ட மண்டபத்தில் மற்ற இரண்டு கல்வெட்டுகளுக்கும் நடுவில் இருப்பதாகக் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் இந்த மூன்றாவது என்னவாயிற்று  என்று ஊகிக்க முடியவில்லை.

மெக்கன்ஸியின் வரைபடம். நன்றி: திரு.ஆர். கோபு

கேப்டன் எம்.டபிள்யூ. கார்  தொகுப்பில் புனித ஜார்ஜ் கோட்டையின் காவற்படை தேவாலய போதகர் மறைத்திரு (ரெவரெண்ட்). ஜார்ஜ் மாஹோன் எழுதிய கட்டுரை  ஒன்றும் (Guide to Sculptures Excavations and Other Remarkable Objects at Mamallaipur generally known to Europeans as the 'Seven Pagodas' by the Late Lieutenant John Braddock of Madras Establishment with additional notes by Rev William Taylor and supplementary information by Walter Elliot compiled by Rev George Mahon AM, Garrison Chaplain, Fort St George.) இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரையில் அதிரணசண்ட மண்டபம், சாளுவன்குப்பத்துக்கும் - மாமல்லபுரத்துக்கும் இடையே இரண்டு சோழர் கால தமிழ்க் கல்வெட்டுகள் இருப்பதாக ரெவரெண்ட். ஜார்ஜ் மாஹோன் குறிப்பிட்டிருக்கிறார்.

திரு.ஆர். கோபு, ஜார்ஜ் மாஹோன் குறிப்பிட்ட இடத்தில் சென்று மேற்கொண்ட தேடல் முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவ்விடத்தில் இந்தியத் தொல்லியல் துறையின் குறிப்புக்கல் (marker stone) ஒன்று நடப்பட்டிருந்தது மட்டும் தெரிந்தது. குறிப்புக்கல் அருகில் ஒரு பெரிய பாறை உள்ளது. ஆனால் ஜார்ஜ் மாஹோன்  குறிப்பிட்ட இரண்டு சோழர் கால தமிழ்க் கல்வெட்டுகளை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தொல்லியல் துறையின் குறிப்புக்கல்

இது பற்றி டாக்டர். ஆர். நாகசுவாமி அவர்கள் தம் தமிழ் ஆர்ட்ஸ் அகாடமி என்ற அமைப்பின் மூலம் தன்  இல்லத்தில் ஒரு சொற்பொழிவினை 06 மே 2015 ஆம் நாளன்று  மாலை நேரத்தில் வழங்கினார். திரு. ஆர்.கோபு அவர்களை பாபிங்க்டன் மற்றும் மாஹோன் ஆகியோரின் கட்டுரைகளைப் பற்றி ஒரு முன்னுரை வழங்கினார்.   ஆர். நாகசுவாமி அவர்களின்  'மாமல்லபுரத்தில் அமைந்துள்ள  குடைவரைகள், ஒற்றைக்கல் இரதங்கள், கட்டுமானக் கோவில்கள் யாவும் இராஜசிம்ஹனால் கட்டப்பட்டவையே '   என்ற கருத்து இவ்வாய்வுகளின் மூலம் வலுப்பெறுகிறது. மேலும் எதிர்காலத்தில் பாபிங்க்டன் மற்றும் மாஹோன் ஆகியோர் குறிப்பிட்ட கல்வெட்டுக்களைப் பற்றிய அகழ்வாய்வுகள் மிகவும் அவசியமாகிறது.  தொல்லியல் துறையினர் பிற்காலங்களில் இப்பகுதிகளில் மேற்கொள்ளும் அகழ்வாய்வுகளிலிருந்து விடை கிடைக்கக்கூடும் என்று நம்புவோம்.

நன்றி: தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை, சென்னை. தமிழ் ஆர்ட்ஸ் அகாடமி, சென்னை. டாக்டர். ஆர் . நாகசுவாமி,  பேரா. எஸ் . சுவாமிநாதன், திரு.பத்ரி சேஷாத்ரி, திரு. ஆர். கோபு  மற்றும் உறுப்பினர்கள். 

Reference:

  1. Babington, Benjamin Guy. An Account of the Sculptures and Inscriptions at Mahamalaipur; illustrated by Plates.(Internet Archive). Read July 12, 1828

  2. Carr, Mark William. The Seven Pagodas on the Coromandel Coast, Descriptive and Historical Papers. (1869) 
  3. Carr, Mark William. Descriptive and Historical Papers Relating to the Seven Pagodas on the Coromandel Coast (1869). Kissinger Publishing. 978-1120188328. 310 pages. Amazon
  4. Gopu, R. Athiranchanda Surprise - Babington's Gift. Ajivaka Lynnist Wallacian. Blog. 09 May 2015
  5. Mahon, George. Guide to Sculptures Excavations and Other Remarkable Objects at Mamallaipur generally known to Europeans as the 'Seven Pagodas' by the Late Lieutenant John Braddock of Madras Establishment with additional notes by Rev William Taylor and supplementary information by Walter Elliot compiled by Rev George Mahon AM, Garrison Chaplain, Fort St George. (Google Books)
  6. New transcript confirms Rajasimha built. Times of India May 17, 2015 http://timesofindia.indiatimes.com/city/chennai/New-transcript-confirms-Rajasimha-built-Mahabs/articleshow/47316555.cms.
  7. பத்ரி சேஷாத்ரி. அதிரணசண்ட மண்டபத்தின் மூன்றாவது கல்வெட்டு. May 07, 2015.
Youtube
New Light on Mamallapuram Dr. Nagaswami by G.Vijayan
Related Posts Plugin for WordPress, Blogger...