Showing posts with label விறலிவிடு தூது. Show all posts
Showing posts with label விறலிவிடு தூது. Show all posts

Wednesday, December 3, 2014

கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது: கிளுகிளுப்பான தமிழ் தூது இலக்கியம்



கூளப்பநாயக்கன் காதல் மற்றும் கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது என்ற இரண்டு நூற்கள் பதினேழாம் நூற்றாண்டில் தோன்றிய தூது இலக்கியங்களாகும்இந்த இரண்டு நூற்களையும் இயற்றியவர் சுப்ரதீபக் கவிராயர்.

16 ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 17 ஆம்   நூற்றாண்டின் தொடக்க காலங்களில் தமிழகத்தில் நாயக்கர்கள் ஆட்சி மலர்ந்தது. நாயக்க மன்னர்கள் தஞ்சை, மதுரை போன்ற பகுதிகளை விஜயநகர அரசின் பிரதிநிதிகளாக ஆளத் தொடங்கினார்கள். இவர்கள் தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் சரியாக ஆதரிக்கவில்லை.

நாயக்க மன்னர்கள் தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் போதிய ஆதரவு அளிக்காவிட்டாலும் பொதுமக்கள், ஜமீன்தார்கள் மற்றும் செல்வந்தர்களின் ஆதரவு போதிய அளவில் தமிழ் சிற்றிலக்கியங்களுக்கு  இருந்தது எனலாம். இப்படி சில ஜமீன்தார்கள் மற்றும் செல்வர்களின் ஆதரவில் 17 ஆம் நூற்றாண்டில் காதல், மடல், தூது, நொண்டிநாடகம் போன்ற காமச்சுவை ததும்பும் சிற்றிலக்கியங்கள் இயற்றப்பட்டன. நிலக்கோட்டை (இன்று ஜமீன் என்று அறியப்படுகிறது) நாயக்க சிற்றரசரான கூளப்ப நாயக்கர்  விரலிவிடு தூது போன்ற சிற்றிலக்கியத்துக்கு ஆதரவு தந்துள்ளார்.
 
உயர்திணை மாந்தர்களான புலவர், பாணர், கூத்தர், அறிவர், பார்ப்பான், பாங்கன், விருந்தினர்,  இளையர், பாடினி, விறலியர், தோழி, தாய் மற்றும்
எகினம், மயில், கிளி, மழை, பூவை, சகி, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு முதலிய அஃறிணைப் பொருட்களைத் தூது செல்லும்படி ஏவிவிடுவது போன்று அமைக்கும் இலக்கியம் தூது இலக்கியம் என்று வகைப்படுத்தப்படுகிறது. தலைவி தலைவனிடத்தேயும், தலைவன் தலைவியிடத்தேயும் அனுப்புகின்ற தூது அகத்தூது என்றும்; அரசன் பகைவரிடத்தேயும், புலவர் வள்ளலிடத்தேயும் அனுப்புகின்ற தூது புறத்தூது என்றும் வகைப்படுத்துகிறார்கள். தூது நூல்கள் கலிவெண்பா என்ற யாப்பில் இயற்றப்பட வேண்டும் எனப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன.

இவ்வாறு அனுப்பும் பல அகத்தூதுகள் காதலால் கட்டுண்டு பின் பிரிவுத் துயரால் துன்புறும் தலைவன் மற்றும் தலைவியரிடையே நிகழ்ந்தன. ஒருவர்
தனது பிரிவுத்துயரை மற்றவருக்கு அறிவிக்க புலவர், பாணர், கூத்தர், அறிவர், பார்ப்பான், பாங்கன், விருந்தினர்,  இளையர், பாடினி, விறலியர், தோழி, பூவை, தாய் போன்ற மனிதர்களையும், எகினம், மயில், கிளி,   குயில், வண்டு அன்னம், மான், பூநெல் போன்ற பிற உயிரினங்களையும், மழை, மேகம், தென்றல் போன்ற அஃறிணைப் பொருட்களையும் தூதாக அனுப்பினார்கள். முதன்முதலில் கி.பி. 14ஆம் நூற்றாண்டில் நெஞ்சுவிடு தூது என்ற தமிழ் தூது இலக்கியம் தோன்றியது. தொடர்ந்து அன்னம் விடு தூது, காக்கை விடு தூது, கிள்ளை விடு தூது, மான் விடு தூது, மேகம் விடு தூது போன்று பல தூது இலக்கியங்கள் தோன்றின.

சில சங்க இலக்கியப் பாடல்களில் தலைவன் தலைவியரிடையே தூது அனுப்பும் செய்தி காணப்படுகிறது. பிற்காலத்தில் தோன்றிய சைவ வைணவ பக்தி இலக்கியங்கள் கடவுளர்களைத் தலைவனாகப் பாவித்து தூது அனுப்பும் செய்தி வருகிறது. தூது என்ற சிற்றிலக்கிய வகை தூது பற்றிய அடிப்படையில் அமைந்தது. பிரபந்தங்கள் என்னும் சிற்றிலக்கிய வகை வடமொழியில் உள்ளது. வடமொழியில் தூது இலக்கியம் சந்தேசம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதுமகாகவி காளிதாசன் இயற்றிய மேக சந்தேசம் (மேகத்தைத் தூது விடுவது) பிரபல தூது இலக்கியமாகும்.

கூளப்பநாயக்கன் காதல் மற்றும் கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது 

கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது  1728 இல் நிலக்கோட்டையை ஆண்ட 1728-ல் நிலக்கோட்டையை ஆண்ட கூளப்பநாயக்கன் என்னும் நாயக்க சிற்றரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுந்ததுஇத்தலைப்பில் கவிஞர் கண்ணதாசனின் கிளுகிளுப்பான உரையுடன் இணைந்த கூளப்ப நாயக்கன் காதல் என்னும் நூல் வெளிவந்துள்ளது.

விறலிவிடு தூதில் பொதுவாகக் காணப்படும் கதை இதுதான்: உயர்குடிப் பிறந்த ஆண்மக்கள் காமம் துய்க்க தாசியை நாடுவதும், இதன் மூலம் பொருள் இழத்தலும் நாளடைவில் தாசியால் அவமதிக்கப்பட்டு அவளைவிட்டு வெளியேறுதலும் இறுதியில் விறலியைத் தூதுவிட்டு, குடும்பத்துடன் இணைந்து மனைவி மக்களுடன் இன்பமாக வாழ்தலும் ஆகும். எனவே விறலி விடு தூது இலக்கியங்கள் எல்லாம் கிளுகிளுப்பான சிற்றின்ப வருணனையுடன் கூடிய பாடல்களுடன் கதை சொல்லப்படுகிறது. இறுதியில் நல்லின்பம் பெற ஆண்மக்களுக்கு அறிவுறுத்துவது. என்றாலும்  புலவரின் நோக்கம் சிற்றின்பம் பற்றி விலாவரியாகச் சொல்வதுதான். 

விறலி விடு தூது இலக்கியங்களில் கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது விரகம், காமம், காதல், எல்லாம் சரிவிகிதத்தில் கலந்து இயற்றப்பட்டுள்ளது. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தாசிப் பெண்களின் ஆடையணிகளான  ரவிக்கை, பொற் சரிகை, கிண்ண முலைக் கச்சு, சந்திர காந்தக் கச்சு என்பது பற்றியெல்லாம் விலாவரியாக தெரியவருகிறது.

எனவே இதற்கு அந்தக்காலத்திலேயே பெரிய வாசகர் வட்டம் இருந்திருக்கிறது. சிற்றின்பப் பிரியர்களான சிற்றரசர்களும், பாளையக்காரர்களும் ஒன்றாகக் கூடி கேட்டுச் சுவைப்பார்களாம். காமம் பற்றிப் பேசினாலும் இவ்விலக்கியங்களில் வரலாறு, பண்பாடு, கலை மற்றும் அரசியல் பற்றிய அரிய செய்திகள் காணக்கிடைக்கின்றன. 
Related Posts Plugin for WordPress, Blogger...