Wednesday, December 3, 2014

கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது: கிளுகிளுப்பான தமிழ் தூது இலக்கியம்



கூளப்பநாயக்கன் காதல் மற்றும் கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது என்ற இரண்டு நூற்கள் பதினேழாம் நூற்றாண்டில் தோன்றிய தூது இலக்கியங்களாகும்இந்த இரண்டு நூற்களையும் இயற்றியவர் சுப்ரதீபக் கவிராயர்.

16 ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 17 ஆம்   நூற்றாண்டின் தொடக்க காலங்களில் தமிழகத்தில் நாயக்கர்கள் ஆட்சி மலர்ந்தது. நாயக்க மன்னர்கள் தஞ்சை, மதுரை போன்ற பகுதிகளை விஜயநகர அரசின் பிரதிநிதிகளாக ஆளத் தொடங்கினார்கள். இவர்கள் தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் சரியாக ஆதரிக்கவில்லை.

நாயக்க மன்னர்கள் தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் போதிய ஆதரவு அளிக்காவிட்டாலும் பொதுமக்கள், ஜமீன்தார்கள் மற்றும் செல்வந்தர்களின் ஆதரவு போதிய அளவில் தமிழ் சிற்றிலக்கியங்களுக்கு  இருந்தது எனலாம். இப்படி சில ஜமீன்தார்கள் மற்றும் செல்வர்களின் ஆதரவில் 17 ஆம் நூற்றாண்டில் காதல், மடல், தூது, நொண்டிநாடகம் போன்ற காமச்சுவை ததும்பும் சிற்றிலக்கியங்கள் இயற்றப்பட்டன. நிலக்கோட்டை (இன்று ஜமீன் என்று அறியப்படுகிறது) நாயக்க சிற்றரசரான கூளப்ப நாயக்கர்  விரலிவிடு தூது போன்ற சிற்றிலக்கியத்துக்கு ஆதரவு தந்துள்ளார்.
 
உயர்திணை மாந்தர்களான புலவர், பாணர், கூத்தர், அறிவர், பார்ப்பான், பாங்கன், விருந்தினர்,  இளையர், பாடினி, விறலியர், தோழி, தாய் மற்றும்
எகினம், மயில், கிளி, மழை, பூவை, சகி, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு முதலிய அஃறிணைப் பொருட்களைத் தூது செல்லும்படி ஏவிவிடுவது போன்று அமைக்கும் இலக்கியம் தூது இலக்கியம் என்று வகைப்படுத்தப்படுகிறது. தலைவி தலைவனிடத்தேயும், தலைவன் தலைவியிடத்தேயும் அனுப்புகின்ற தூது அகத்தூது என்றும்; அரசன் பகைவரிடத்தேயும், புலவர் வள்ளலிடத்தேயும் அனுப்புகின்ற தூது புறத்தூது என்றும் வகைப்படுத்துகிறார்கள். தூது நூல்கள் கலிவெண்பா என்ற யாப்பில் இயற்றப்பட வேண்டும் எனப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன.

இவ்வாறு அனுப்பும் பல அகத்தூதுகள் காதலால் கட்டுண்டு பின் பிரிவுத் துயரால் துன்புறும் தலைவன் மற்றும் தலைவியரிடையே நிகழ்ந்தன. ஒருவர்
தனது பிரிவுத்துயரை மற்றவருக்கு அறிவிக்க புலவர், பாணர், கூத்தர், அறிவர், பார்ப்பான், பாங்கன், விருந்தினர்,  இளையர், பாடினி, விறலியர், தோழி, பூவை, தாய் போன்ற மனிதர்களையும், எகினம், மயில், கிளி,   குயில், வண்டு அன்னம், மான், பூநெல் போன்ற பிற உயிரினங்களையும், மழை, மேகம், தென்றல் போன்ற அஃறிணைப் பொருட்களையும் தூதாக அனுப்பினார்கள். முதன்முதலில் கி.பி. 14ஆம் நூற்றாண்டில் நெஞ்சுவிடு தூது என்ற தமிழ் தூது இலக்கியம் தோன்றியது. தொடர்ந்து அன்னம் விடு தூது, காக்கை விடு தூது, கிள்ளை விடு தூது, மான் விடு தூது, மேகம் விடு தூது போன்று பல தூது இலக்கியங்கள் தோன்றின.

சில சங்க இலக்கியப் பாடல்களில் தலைவன் தலைவியரிடையே தூது அனுப்பும் செய்தி காணப்படுகிறது. பிற்காலத்தில் தோன்றிய சைவ வைணவ பக்தி இலக்கியங்கள் கடவுளர்களைத் தலைவனாகப் பாவித்து தூது அனுப்பும் செய்தி வருகிறது. தூது என்ற சிற்றிலக்கிய வகை தூது பற்றிய அடிப்படையில் அமைந்தது. பிரபந்தங்கள் என்னும் சிற்றிலக்கிய வகை வடமொழியில் உள்ளது. வடமொழியில் தூது இலக்கியம் சந்தேசம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதுமகாகவி காளிதாசன் இயற்றிய மேக சந்தேசம் (மேகத்தைத் தூது விடுவது) பிரபல தூது இலக்கியமாகும்.

கூளப்பநாயக்கன் காதல் மற்றும் கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது 

கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது  1728 இல் நிலக்கோட்டையை ஆண்ட 1728-ல் நிலக்கோட்டையை ஆண்ட கூளப்பநாயக்கன் என்னும் நாயக்க சிற்றரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுந்ததுஇத்தலைப்பில் கவிஞர் கண்ணதாசனின் கிளுகிளுப்பான உரையுடன் இணைந்த கூளப்ப நாயக்கன் காதல் என்னும் நூல் வெளிவந்துள்ளது.

விறலிவிடு தூதில் பொதுவாகக் காணப்படும் கதை இதுதான்: உயர்குடிப் பிறந்த ஆண்மக்கள் காமம் துய்க்க தாசியை நாடுவதும், இதன் மூலம் பொருள் இழத்தலும் நாளடைவில் தாசியால் அவமதிக்கப்பட்டு அவளைவிட்டு வெளியேறுதலும் இறுதியில் விறலியைத் தூதுவிட்டு, குடும்பத்துடன் இணைந்து மனைவி மக்களுடன் இன்பமாக வாழ்தலும் ஆகும். எனவே விறலி விடு தூது இலக்கியங்கள் எல்லாம் கிளுகிளுப்பான சிற்றின்ப வருணனையுடன் கூடிய பாடல்களுடன் கதை சொல்லப்படுகிறது. இறுதியில் நல்லின்பம் பெற ஆண்மக்களுக்கு அறிவுறுத்துவது. என்றாலும்  புலவரின் நோக்கம் சிற்றின்பம் பற்றி விலாவரியாகச் சொல்வதுதான். 

விறலி விடு தூது இலக்கியங்களில் கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது விரகம், காமம், காதல், எல்லாம் சரிவிகிதத்தில் கலந்து இயற்றப்பட்டுள்ளது. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தாசிப் பெண்களின் ஆடையணிகளான  ரவிக்கை, பொற் சரிகை, கிண்ண முலைக் கச்சு, சந்திர காந்தக் கச்சு என்பது பற்றியெல்லாம் விலாவரியாக தெரியவருகிறது.

எனவே இதற்கு அந்தக்காலத்திலேயே பெரிய வாசகர் வட்டம் இருந்திருக்கிறது. சிற்றின்பப் பிரியர்களான சிற்றரசர்களும், பாளையக்காரர்களும் ஒன்றாகக் கூடி கேட்டுச் சுவைப்பார்களாம். காமம் பற்றிப் பேசினாலும் இவ்விலக்கியங்களில் வரலாறு, பண்பாடு, கலை மற்றும் அரசியல் பற்றிய அரிய செய்திகள் காணக்கிடைக்கின்றன. 
 
சுப்பிரதீபக் கவிராயர்

மதுரைச் சுப்பிரதீபக் கவிராயர் வீரமாமுனிவருக்குத் தமிழ் கற்பித்தவர். வீரமாமுனிவர் தூண்டுதல் காரணமாகக் கிறித்தவரானார் என்கிறார்கள். வீரமாமுனிவர் இயற்றியதாகக் கருத்தப்படும் தேம்பாவணி என்னும் காப்பியம் வீரமாமுனிவர் கதை சொல்லச்சொல்ல சுப்பிரதீபக் கவிராயர் பாடல்களை இயற்றியதாக மு. அருணாசலம் என்ற இலக்கிய வரலாற்றறிஞர் கருதுகிறார். இவர் மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கரின் ஆதரவு தேடியபோது போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

வரலாறு  

விஜயநகர பேரரசின் ஆட்சி காலத்தில் நாயக்கர் என்ற படைத்தலைவர் தமிழகத்தில் நியமிக்கப்பட்டார். விஜயநகரப் பேரரசின் ஆட்சியின் போது விஸ்வநாத நாயக்கரால் (1529 - 1564) மதுரை மண்டலத்தில் படை மானிய முறையில் 72 பாளையங்கள் அமைக்கப்பட்டன. பாளையம் என்ற சொல் பாலாமு என்ற தெலுங்கு வேர்ச்சொல்லிலிருந்து வந்துள்ளது. அது சரி பாலாமு என்றால் என்ன? இராணுவ முகாம் என்று பொருளாம். கூளப்ப நாயக்கர் விஜயநகரப் பேரரசின் ஆட்சியின் போது விஸ்வநாத நாயக்கரால் அமைக்கப்பட்ட 72 பாளையங்களில் ஒன்றான நிலக்கோட்டை என்னும் பாளையத்தை ஆட்சி செய்த பாளையக்காரர். கூளப்பாநாயக்கருக்கு நிகளங்க மல்லன் என்ற பெயரும் இருந்த விபரம் சந்தா சாகிப்பின் வரலாற்று ஆவணங்கள் மூலம் தெரிகிறது.

நிலக்கோட்டை அப்போது (தற்போதைய அமைவிடம் திண்டுக்கல் மாவட்டம்) என்பது ஒரு படைநிலையாகவே அமைக்கப்பட்டது. அச்சமயம் கூளப்ப நாயக்கரின் தந்தை சிந்தமநாயக்கர் நிலக்கோட்டை பாளையக்கரராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் மதுரையை திருமலை நாயக்கரின் வம்சாவழியைச் சார்ந்தவர். வடக்கில் திண்டுக்கல்லிருந்து மேற்கே சித்தையன் கோட்டைவரை பரவியிருந்த 108 கிராமங்களை உள்ளடக்கிய நிலக்கோட்டை பாளையத்தை திறம்பட நிர்வாகித்து வந்தார். சிந்தமநாயக்கரின் மகன்தான் கூளப்ப நாயக்கர். நாளடைவில் நாயக்கர் ஆட்சி முடிந்து ஆற்காடு நவப்களின் ஆட்சி இப்பகுதியில் பரவியது.

ஒரு சமயம் கூளப்ப நாயக்கர் தன் பரிவாரங்கள் புடைசூழ நிலக்கோட்டைக்கு அருகில் உள்ள பன்றிமலைப் பகுதிக்கு வேட்டையாடப் போயிருக்கிறார். வேட்டைக்குப் போன இடத்தில் நவரத்தின மாலை என்ற மலை சாதிப் பெண்ணைக் கண்டார்; கண்டதும் காதல் பற்றிக்கொண்டது. நாயக்கர் மலை சாதிப் பெண்ணுடன் காதல் முற்றி காமம் ததும்ப வாழ்ந்திருக்கிறார். இதற்கிடையே சிந்தமநாயக்கரிடமிருந்து ஏதோ அவசர செய்தி வரவே கூளப்ப நாயக்கர் நவரத்தின மாலையைப் பிரிந்து நிலக்கோட்டை திரும்பியிருக்கிறார். நாளடைவில் நவரத்தின மாலை பற்றிய பிரிவால் மனம் வாடி மெலிந்து போனார் நாயக்கர். பிறகு என்ன நடந்தாலும் சரி என்று துணிந்து பண்றிமலைக்குப் போய் நவரத்தின மாலையைச் சந்தித்து ஆறுதல் கூறி அப்பெண்ணை நிலக்கோட்டைக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டது இக்கதையின் உச்ச கட்டம்.

கூளப்ப நாயக்கரின் பிற்கால வாழ்க்கை மிகவும் சோகமானது. நிலக்கோட்டை ஜாமீன் ஆங்கிலேயர் வசம் போயிற்று. நாயக்கர் தான் வசூலித்த வரிப்பணத்தில் மூன்றில் ஒரு பாகத்தைக் கிஸ்தியாகக் கட்டவேண்டும் என்பது நிபந்தனை. மூன்று வருஷம் கடும் பஞ்சம் வறட்சி எல்லாம் ஒன்றாய் வரவே நாயக்கர் வரி வசூல் செய்யத் திணறினார். ஆங்கிலேயர்கள் கோபப்பட்டு ஜமீனைப் பிடுங்கிக் கொண்டார்கள். ஒருவழியாக கிஸ்தியைக் கட்டி ஜமீனை மீட்பதற்குள் மீண்டும் ஒரு பஞ்சம். நாயக்கர் திணறிப் போய்விட்டார். ஆங்கிலேயர்கள் நாயக்கரை கைது செய்ய வரவே, இவர் தப்பி விட்டார். ஆங்கிலேயர்கள் நாயக்கர் தலைக்கு விலை வைத்து பரிசு தருவதாக தண்டோரா போட்டார்கள். என்றாலும்  நாயக்கர் தற்செயலாகவே பிடிபட்டார். குதிரைத் தொழுவத்தில் வேலை பார்க்க வைத்துவிட்டார்கள். நாயக்கர் கில்லாடியாயிற்றே மீண்டும் தப்பித்து விட்டார். தப்பிப் பிழைத்த நாயக்கர் கழைக்கூத்தாடிகளுடன் சேர்ந்து கொண்டு வேஷம் கட்டியிருக்கிறார். ஒரு நாள் கழைக்கூத்து முடிந்து பொதுமக்களிடம் தட்டேந்தி நாயக்கர் வந்தபோது சிலுக்குவார் பட்டி கணக்குப்பிள்ளை இவரை அடையாளம் கண்டு கொண்டார். 

'எங்கள் ஜமீன்தார் ஆங்கிலேயர்களுக்குப் பயந்துகொண்டு இப்படிக் கழைக்கூத்தாடுவதா?'  என்று ஆங்கிலேயரிடம் போய், ''என் தலையை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்; எங்கள் ஜமீன்தாரை இப்படி அலைய விடாதீர்கள்'' என்று கேட்டுக்கொள்ள... ஆங்கிலேயர்கள் நாயக்கரது செல்வாக்கைப் பார்த்து அசந்துபோய் அவரிடம் மீண்டும் ஜமீனை ஒப்படைத்தார்களாம்.

மேற்கோள்கள்

  1. இருளில் ஓர் அரண்மனை! ஆனந்த விகடன் 05 Sep, 2012 
  2. நா.கணேசன். எண்ணங்களின் ஊர்வலம் -11. மின்தமிழ். கூகுள் க்ரூப்.   
  3. நா.கணேசன். தாதப்பட்டி நெடுங்கல்லில் பழந்தமிழ்க் கல்வெட்டு. தமிழ்க் கொங்கு. அக்டோபர் 01, 2006 http://nganesan.blogspot.in/2006/10/blog-post.html
  4. நாஞ்சில் நாடன். சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – 2.  சொல்வனம். இதழ் 56

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...